siruppiddy

30/8/13

திரைப்படமாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு " :

 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தை வ.கெளதமன் இயக்குகிறார். சின்னத்திரையில் ஒளிபரப்பான ஆட்டோ சங்கரின் மரண வாக்கு மூலம், வீரப்பனின் வாழ்க்கை தொடர் சந்தனக்காடு, போன்றவற்றை இயக்கிய கெளதமன், மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தற்போது இவர், பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இப்படம் குறித்து வ.கெளதமன் கூறியதாவது:

மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை  திரைப்படமாக பதிவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய பெருங்கனவு. கடந்த பத்தாண்டுகளாக போராட்ட வரலாறு தொடர்பான செய்திகளை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.

கடுமையான போரின் மத்தியிலும் 'சந்தனக்காடு' தொடரை மேதகு பிரபாகரன் அவர்கள் முழுமையாக பார்த்திருக்கின்றார் என்ற செய்தியை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பும் நெகிழ்ச்சியும் இன விடுதலைக்கான படைப்பை செய்ய வேண்டுமென்ற எனது இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கியது.

2008 ஆம் ஆண்டு கால கட்டத்திலேயே ஈழப்போராட்ட வரலாற்றை திரைப்படமாக்கும் பணியை என்னை வைத்து தொடங்க வேண்டும் என மேதகு பிரபாகரன் எண்ணியிருந்தார் என்ற செய்தி அறிந்த போது அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.

அதற்குள்லாக நான்காட் கட்ட ஈழப் போர் கடுமை அடைந்துவிட்டதால் பணிகள் தேங்கியது.
இதுபதிற்கு மேற்பட்ட நாடுகளின் துணையோடு ஈழம்

சிதைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மினத்தின் விடுதலை வேட்கை சிதையவில்லை. இதுவரை மூன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். போருக்கு பிறகும் தமிழர்களுக்கு விடிவில்லை.

உயிரை உறையச் செய்யும் இந்த உண்மை மீது பெரிதாக கவனம் கொள்ளாத உலக சமூகத்தின் மனசாட்சியை இப்படைப்பு உலுக்கும். இந்த படத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், நடிகையரும் பங்கேற்கிறார்கள்.

வரலாற்று நாயகன் பிரபாகாரனாக ஒரு பச்சைத் தமிழன் தான் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடக்க விழா குறித்தும், படத்தில் பங்கு பெறும் நடிகர், நடிகையர் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்.

பிரேவ் ஹார்ட், உமர் முக்தார் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் இப்படம் உருவாக்கப்படும். மிக பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட இருக்கும் இந்த தமிழ்த் திரைப்படம், இந்திய மொழிகளில் மாட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படும்.

முள்ளிவாய்க்காலில் நந்திக் கடல் பகுதியில் உலக நாடுகள் தந்த பெரும் ஆயுதங்களோடு நாலா பக்கமும் சிங்களப் படைகள் சூழ்ந்து நின்ற அந்தக் கடைசி நிமிடங்களில் அல்ல, அந்த கடைசி நொடியில் மேதகு பிரபாகரன் என்ன முடிவெடுத்தார் என்பது இன்றுவரை எவரும் அறிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கின்றது.

அந்த இறுதி நொடியின் நிகழ்வை உண்மையாகவும் உக்கிரமாகவும் இந்தப் படைப்பு பறைசாற்றும்.

ஒவ்வொரு தமிழனும் இந்த இனத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்ளும் வகையில், எம் இனத்தை அழித்தொழிக்க கைகோர்த்து நின்ற எதிரிகளும் துரோகிகளும் தலைமுறை கடந்தும் தலை குனிந்து நிற்கும் விதத்தில் உருவாகும் இத்திரைப்படம், ஒரு திரைப் படைப்பு மட்டுமல்லாமல் தமிழின விடுதலையின் திறவுகோலாகவும் இருக்கும்

29/8/13

புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய நவநீதம்பிள்ளை


விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார்.
அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது

28/8/13

யாழ் நூலகத்தில் சம்பவம் !கோலம் போட்ட நவிப் பிள்ளை

:   

நேற்று முன் தினம் யாழ் நூலகத்திற்குச் சென்ற நவிப்பிள்ளை, அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பின்னர் பின் வாசலால் சென்ற விடையம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இதேவேளை யாழ் நூலகத்திற்குள் அவர் செல்லும் வேளை அங்கே போடப்பட்டு இருந்த கோலத்தை அவர் தற்செயலாக தனது கால்களால் தட்டிவிட்டார். இதனையடுத்து உடனே குனிந்து அங்கே விலகிக் கிடந்த கோலமா மற்றும் அரிசிகளைப் பொறுக்கி அப்படியே கோலம் போட ஆரம்பித்துவிட்டார். கோலத்தை சரிசெய்த பின்னரே அவர் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றார். நவிப்பிள்ளை கோலம் போடுவதை சிங்கள அதிகாரிகளும் மற்றும் ஆளுனரும் சிரிப்போடு பார்வையிட்டார்கள்

                                   

வருகிறார்கள்யாழில் இருந்து ராமேஸ்வரத்தில் ஆயுதப்படை போலீசார்!


யாழ்ப்பாணத்தில் இருந்து பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், படகுகள் மூலம் ராமேஸ்வரம் வர உள்ளதாக இந்திய உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் சாதாரண எச்சரிக்கையாக எடுத்துவிடவும் முடியாது. தற்போது உள்ள சூழ் நிலையில், யாழில் "றோ" அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு கொடுத்த தகவலையே அவர்கள் தமிழகப் பொலிசாருக்கு கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம்(27) இதனால் ராமேஸ்வரம் கோயில் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை இந்திய கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், சிலர் விமானம் மூலம் கொழும்பு சென்று பின்னர் அவர்கள் யாழ் சென்று அங்கிருந்து இலகுவாக ராமேஸ்வரம் செல்ல முடியும். தற்போது உள்ள மிக முக்கியமான மற்றும் இலகுவான கடல்வழிப் பாதை இதுவாகும். அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு சில லட்சம் ரூபாய்களைக் கொடுத்தால் போதும். அவர்களிடம் இருந்து வெடிபொருட்களையும் அதி நவீன ஆயுதங்களையும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே அவர்கள் வெறுங்கைகளோடு கொழும்பு செல்லலாம். இதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இதனைத் தான் "றோ" ஏஜன்டுகள் தற்போது தமிழ் நாட்டுப் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இயங்கும் கியூ பிரிவுப் பொலிசார் சிவில் உடையில் ராமேஸ்வரம், மற்றும் அதனை அண்டிய கடல் கரைகளில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டங்களில் இந்தியா, இவ்வளவு தூரம் ஆச்சமடையவே இல்லை. காரணம் அவர்கள் ஒருபோதும் தமிழ் நாட்டை தாக்க மாட்டார்கள் என்பது தெரியும். புலிகளை அழிக்க உதவிய இந்தியா தற்போது பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. இலங்கையில் ரஷ்யா, சீனா, பாக்கிஸ்தான், போன்ற பல வல்லரசுகள் ஊடுருவியுள்ளது. இது நாள்வரை, இந்தியா பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை தான் பாதுகாக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது தமிழக எல்லையையும் பாதுகாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

26/8/13

இராணுவத்தினர்கள்ஊடகவியலாளர் வீட்டுக்குள் புகுந்தனர்!


ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம கடத்திச் செல்லச் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் சிறீலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி டிக்மன்ஸ் வீதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற நிலையில் சிறீலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு  இலக்காகி கொல்லப்பட்ட நபர் சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த கதிரப்புலிகே இந்திக சம்பத் குமார என்ற இராணுவத்தினன் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இலக்கம் 502712, உதசிறி அசங்க என்ற சிறீலங்கா  இராணுவ கோப்ரல், இவர் 5வது சிங்க படைப்பிரின் அதியுயர் பாதுகாப்பு வலய பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றுகிறார்.
இலக்கம் 418908, கதிரப்புலிகே ரெஜின் சந்திமல் குமார சிங்க படைப்பிரிவின் விசேட படைப்பிரிவு அதியுயர் பாதுகாப்பு வலயம் கொழும்பு. கதிரப்புலிகே ரோஹித்த லக்ஷ்மன், வித்தான ஆராச்சிகே சந்தகுமார ஆகியோரும் சிங்கப்படைப் பிரிவினர் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்த தரகுப் பணம் தொடர்பான தகவல்கள் ஊடகவியலாளர் மந்தனாவுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பிலான புலனாய்வு தகவல் சம்பந்தப்பட்ட முக்கிய தலைவரின் மகனுக்கு கிடைத்ததாகவும் இதனையடுத்து அந்த ஆவணங்களை ஊடகவியலாளரிடம் இருந்து கைப்பற்ற அவர்  சிறீலங்கா இராணுவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் தெரியவருகிறது.
இதற்காக பேசப்பட்ட தொகையில் மூன்று லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே செலுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.
ஊடகவியலாளரையோ, அவரது வீட்டில் இருப்பவர்களையோ கொலை செய்யாது, அவரை அச்சுறுத்தி அந்த ஆவணங்களை பெறுமாறு அங்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறீலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டிற்கு புகுந்து அவரை கொலை செய்ய போவதாக அச்சுறுத்தி ஆவணத்தை பெற்று கொள்ளுமாறு, அது சாத்தியப்படவில்லை என்றால் அவரை கடத்திச் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை மந்தனாவின் வீட்டிற்கு சென்ற சிறீலங்கா இராணுவத்தினர் டிபெண்டர் ரக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு இறக்கி விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் அவதானித்துள்ளனர் என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது,
 

24/8/13

குற்றங்களை சொல்ல முனைபவர்களுக்கு அனுமதி மறுப்பு என்கிறது !!


ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவையில் இலங்கை அவமதிக்கும் வகையில் தகவல்களை முன்வைத்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கு, நாளை (25) இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்து நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை தெரிவிக்கவிருந்தவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களும், மேற்குலக தூதரங்களும் அவர் சந்திக்க வேண்டிய நபர்கள் பற்றிய முடிவுகளை எடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் உள்ள சிவில் அமைப்புகள், அரச விரோத ஊடக தரப்பினர் ஆகியோர் நவநீதம்பிள்ளையை சந்தித்து விடயங்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக திவயின கூறியுள்ளது

23/8/13

புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மான் உயிருடன்?


சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் நேற்றைய தினம் அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்துக்கும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறைக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக தாயகச் செய்திகள் தொழிவிக்கின்றன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி, ஜேர்மனியிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த ச.பொட்டுஅம்மான் அவர்களின் சகோதரரை, பொட்டுமான் உயிருடன் இருக்கிறாரா? 2009 மே மாதம் 19ம் திகதிக்குப் பின் தொடர்புகொண்டாரா என்றதொனிப்பட சிறீலங்காப் புலனாய்வுத்துறை விசாரித்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் , பொட்டம்மானின் அண்ணா மாரடைப்பால் தான் மரணமடைந்தார் என்று, தாம் மருத்துவர் போல கூறியிருக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு தலையில் பலத்த அடி காயங்கள் இருப்பதாக அயலவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாது, மரணச் சான்றிதழை வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இவரது உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. சிறீலங்கா புலனாய்வுத்துறையால் இரகசியமாகவும், மிகவும் புத்திசாலித்தனமாகவும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாளை மறுதினம் இலங்கைக்கு நவனீதம் பிள்ளை செல்லவுள்ள நிலையில், மெளனமாக இக் கொலை நடந்தேறியுள்ளதா என்ற சந்தேகங்களும் வலுக்கிறது

19/8/13

திரைப்படத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது:


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் நேற்று அப்படம் திரைப்படப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறிலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்கு மதராஸ் கபே திரைப்படம் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
   
முதலில் ஜாப்னா என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு பிறகு மதராஸ் கபே என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜான் ஆப்ரகாம் தயாரித்துள்ள மதராஸ் கபே, யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியை கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதுபோல் சித்தரிக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாக சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியை காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது. ராஜீவ் காந்தியை கொல்லும் சதித் திட்டம் இந்திய உளவு அமைப்புக்கு தெரிந்திருந்ததாகவும், அவர்கள் ராஜீ்வ் காந்தியை எச்சரிப்பதுபோலவும் காட்டப்படுகிறது. அப்படியானால் இவர்கள் ராஜீவ் காந்தியை காப்பாற்றாமல் போனாது ஏன்? அவர்களும் ராஜீவ் சதியில் சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்கிற கேள்வியையும் திரைக்கதை எழுப்புகிறது. ஏனெனில், நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையையும் படித்த பிறகே இந்தக் கதையின் கருவை முடிவு செய்ததாக ஜான் ஆப்ரகாம் கூறுகிறார்.
மதராஸ் கபே திரைப்படத்தை பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களை தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் � மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது.
இலங்கையில் வரும் நவம்பரில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பெளத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வர் கேட்டுக் கொள்கிறோம்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படுமானால், இந்திய தணிக்கை வாரியத்திடம் நாம் முன் வைக்கும் கேள்வி இதுதான்: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உண்மையாக சித்தரிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுத்து வெளியிட்டால் அதற்கு இதே கருத்துச் சுதந்திரம் என்கிற அடிப்படையில் அனுமதி அளிப்பீர்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் தங்கள் தேசத்தை மீட்க போராடி உயிர் துறந்த தியாகிகள் என்பதை உள்ளது உள்ளபடியே காட்டும் படத்தை எடுத்து இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட தணிக்க வாரியம் அனுமதியளிக்குமா? எங்களின் கேள்விகளுக்கு பதில் கூறட்டும். தமிழினத்தை கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்திற்கு எந்த அடிப்படையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது?
தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம், இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கு திரையிட்டாலும் அது தமிழர்களின் உணர்வை பாதிக்கும். தமிழர்களின் உணர்வை பாதிக்கும் திரைப்படம் இந்தியா முழுவதும் காட்டப்படும் என்றால், தமிழனின் உணர்வுகளுக்கு இந்தியாவில் மதிப்பில்லை என்றே புரிந்துகொள்ளப்படும். அது இந்த தேசத்தின் அங்கும் நாம் என்கிற உணர்வோடு வாழும் தமிழர்களை அந்நியப்படுத்தும், அது நல்லதல்ல. எனவே இத்திரைப்படத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வெளியிட தடை விதிக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இத்திரைப்படம் தமிழர் நாட்டில் எங்கு வெளியிடப்பட்டாலும் அதனை எதிர்ப்போம். இது உறுதி.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,{காணொளி,}
 
{காணொளி,}

16/8/13

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது நெடுந்தீவில் தாக்குதல்


நெடுந்தீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனரகரத்தினத்திற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்யச் சென்றபொழுது விசாரணைகளை ஏற்கமுடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரியிடம் வினாவிய பொழுது இச் சம்பவங்கள் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இன்னமும் பதிவு செய்யப்படவில்லையென அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்திற்கு ஆதாரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் கடந்த நான்கு நாட்களாக வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ரணசிங்க ஆரியக்கோன் (வயது 40) என்ற நபர் கடுமையான காயங்களுக்கிலக்காகிய நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சைமன் ஜேசுதாஸன், ஜேசுதாஸன் அன்டனிட்டா ஆகியோர் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

15/8/13

ஆட்சியின் இறுதிக்கட்டமே இது : பொது எதிரணிகளின்



வெலிவேரிய சம்பவத்தினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொது எதிரணிகளின் தலைவர்கள் ஒருமித்து மஹிந்த ஆட்சியின் இறுதிக்கட்டமே இதுவென தெரிவித்தனர்.
இங்கு பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இறுதிக் கட்டத்தினையே தற்போது அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றது. தண்ணீர் கேட்ட வெலிவேரிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பள்ளிவாசல்களை உடைக்கும் இவ் அரசாங்கம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.
பௌத்தம் என்று சொல்லிக் கொண்டு பௌத்த மதத்திற்கு எதிரான கொடுமைகளையே அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது.
இதற்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களும் இன்று ஒன்றிணைந்து போராட ஆரம்பித்து விட்டனர். எனவே, இதற்கு மேல் இந்த அரசாங்கம் ஆட்சியினை நினைத்துக் கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்தார்.
ரவி கருணாநாயக்க எம்.பி. பேசுகையில்,
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பினை இனியும் அரசாங்கம் செய்ய முடியாது. உணவுக்காக, தண்ணீருக்காக நிதி ஒதுக்கமுடியாத அரசாங்கம் உகண்டாவுக்கு நன்கொடை செய்கின்றது. முதலில் எமது மக்கள் மீது அக்கறை இருக்கவேண்டும். பின்னர் வெளிநாடுகளுக்கு உதவி செய்யலாம் எனக் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச எம்.பி. கூறுகையில்,
மக்களைக் கொன்று குவித்தே இந்த அரசாங்கம் ஆட்சியினை நடத்துகின்றது. வடக்கில் ஆரம்பித்த இராணுவக் காட்டுமிராண்டித்தனம் இன்று தெற்கு வரையில் தொடர்ந்து கொண்டே போகின்றது.
இனியும் மக்களை ஏமாற்றி மக்களின் பணத்தை சூறையாடி ஆட்சி நடத்தமுடியாது. மக்கள் இதற்கான சரியான தீர்ப்பினைத் பெற்றுத் தருவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. கூறுகையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டின் அனைத்து மூலையிலும் இராணுவத்தினரை குவித்து மோசமானதொரு அராஜக ஆட்சியினை மேற்கொண்டு வருகின்றது. துப்பாக்கியினை நீட்டி ஆட்சி நடத்துவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய அரசின் அராஜகங்களை மக்கள் ஒவ்வொரு நாளும் சகித்துக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தின் எல்லை கடந்த அராஜகச் செயற்பாடுகளுக்கு நாம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறுகையில்,
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட ஆர்ப்பாட்டமாகவே நாம் இன்று கூடியுள்ளோம். அரசாங்கம் மதவாதத்தினைத் தூண்டி மக்களிடையே பிரிவினையினை ஏற்படுத்தி நாட்டினை சீரழிக்க முயல்கின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
வடக்கில் தமிழர்களை அழித்து, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம் மக்களை அழித்துவரும் அரசாங்கம் இன்று சிங்கள மக்களையும் அழிக்க ஆரம்பித்துவிட்டது. அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமும் பதவி, பண ஆசையாலும் நாட்டினை வெளிநாடுகளுக்குக் கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை நிறுத்தவேண்டிய காலம் அரசாங்கத்திற்கு வந்துவிட்டது. இனியும் அரசின் திட்டங்கள் பலிக்கப்போவதில்லை என்றார்.

14/8/13

இனப்படுகொலையை மூடி மறைக்கும் 3 பேர் !!!


தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ஏழரை லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை.
இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள்.
நடப்பது இனப்படுகொலை என்பதைச்  சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன. இந்தியா அதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தது. மரண வளையத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அப்பாவித் தமிழ் மக்கள்தான் என்று இந்தியாவுக்குக் கண்டிப்பாகத் தெரியும். தோராயமாக எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் - என்கிற கணக்கும் தெரியும். அதுகூட தெரியாத மரமண்டைகளா இங்கே அதிகாரிகளாக இருக்கிறார்கள்....  இவர்களது மண்டை முழுக்க மூளையால் ஆனது. இதயம் தான் பிரச்சினை... அனேகமாக அது இரும்பினால் ஆனது.  அதிலும் கேரளத்து இரும்பு. கேட்க வேண்டுமா?
நோயாளிகள் நிறைந்து வழியும் மருத்துவமனைகளைத் தாக்குவது சர்வதேச விதிகளின் படி குற்றம் என்பது இந்தியாவுக்குத் தெரியும். மருத்துவமனைகளைக் கூட இலங்கை விட்டுவைக்காமல் தாக்கியதும் தெரியும். இலக்கு தெரியாத தொலைவில் இருந்து தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம், மருத்துவ மனைகளை மிகக் குறுகிய தொலைவிலிருந்து தாக்கியதும், விமானங்களிலிருந்து மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தகர்த்ததும் தெரியும். இவ்வளவு தெரிந்த பிறகும் இந்தியா தனது கடமையைச் செய்திருக்க வேண்டாமா என்று கேட்டீர்களென்றால், உங்களுக்கு விவரம் தெரியவில்லை என்று அர்த்தம்.
உண்மையில், மூன்று கடமைகளைக் கச்சிதமாகச் செய்தது இந்தியா. ஒன்று - தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நின்று விடாதபடி பார்த்துக்கொண்டது. இன்னொன்று - அங்கே என்ன நடக்கிறதென்பது வெளித் தெரியாதபடி பார்த்துக் கொண்டது. மற்றொன்று - அப்படியே தப்பித் தவறி சர்வதேச சமூகத்திலிருந்து யாராவது முணுமுணுத்தால் அவர்களை சமத்காரமாக சமாதானப்படுத்தியது, தமிழ்நாட்டிலிருந்து யாராவது குரல்கொடுத்தால் அவர்களை ஒடுக்கியது.
நடப்பது இனப்படுகொலை என்பதும், ஆயிரமாயிரமாய் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதும், தமிழ்ச் சகோதரிகள் திட்டமிட்ட பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதும் தாய்த் தமிழகத்துக்குத் தெரியவந்தால், விளைவு விபரீதமாக இருக்கும் என்று நினைத்தது இந்தியா. அதனால்தான், அங்கே என்ன நடக்கிறது என்பது ஊடகங்களில் முழுமையாக வெளிவராதபடி பார்த்துக் கொண்டது. ஏழரைக் கோடி பேர் இருக்கும் தாய்த் தமிழகம் தெருவுக்கு வந்துநின்றால், அங்கே இனப்படுகொலையை நிறுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்படுமே! அதனால்தான் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்காதபடி பார்த்துக்கொண்டது. (நீடூழி வாழ்க ஊடக சுதந்திரம்!)
அங்கே என்ன நடக்கிறது என்பதை மட்டுமல்ல, இங்கே மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்த முத்துக்குமாரைக் கூட இருட்டடிப்பு செய்யத் தயங்கவில்லை நமது பாசத்துக்குரிய பத்திரிகையாளர்களில் பலரும்! நித்யானந்தா விவகாரம் என்றால் மட்டும், படுக்கையறை வரை படையெடுக்கும் மாவீரர்கள், தங்களது சொந்தங்கள் உறவுகள் கொல்லப்பட்டபோது எங்கே போனார்கள்? பாரதியார், கல்கி, திரு.வி.க., புதுமைப்பித்தன்  போன்றவர்களெல்லாம் பத்திரிகையாளர்களாக இருந்த மண், இந்தத் தமிழ் மண் என்பதை எண்ணிப் பெருமூச்சு விடவேண்டிய நிலை.

அன்று, இனப்படுகொலை நடந்தே தீரவேண்டும் என்பதில் அக்கறை காட்டிய அதே அளவுக்கு, அது வெளியே தெரிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வதிலும் அக்கறை காட்டியது இந்தியா.  இன்று - நடந்த  இனப்படுகொலையை மூடிமறைப்பதில், இலங்கை காட்டும் அக்கறையைக் காட்டிலும், அதிக அக்கறையைக் காட்டுகிறது.

திகில் திரைப்படங்களில், கள்ளக் காதலியோடு சேர்ந்து அவளது  கணவனைக் கொன்றவன், அந்த உடலை காரில் வைத்துக்கொண்டு, யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒரு இடத்தில் அதைப் புதைத்துவிட அவளோடு சேர்ந்து அலைவான் பாருங்கள்... அதே பதற்றத்துடன் ஜெனிவா, லண்டன் என்று பதறி அடித்துக்கொண்டு திரிகிறது இந்தியா. இலங்கைக்கு எதிராக, அங்கே நடந்த இனப்படுகொலைக்கு எதிராக,  எங்கேயாவது யாராவது மனசாட்சியுடன் ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அதை நீர்த்துப் போகவைத்து இலங்கையைக் காப்பாற்ற அனைத்து வழிகளிலும் மெனக்கெடுகிறது.  காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தியே ஆகவேண்டும் என்பதற்காக, லண்டனில் அதுதொடர்பாக நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சம்மனே இல்லாமல் வாலை நீட்டுகிறது.

இனப்படுகொலை நடந்தது இலங்கையில். ஆனால், ஒன்றரை லட்சம் பேரைக் கொன்று குவித்தது அம்பலமாகி விடுமோ - என்கிற பதற்றம் இந்தியா அளவுக்கு இலங்கையிடம் இல்லை.  சர்வதேசத்தைப் பற்றிய கவலையேயின்றி, இனப்படுகொலை நடவடிக்கைகளை இப்போதும் தொடர்கிறது. பாலியல் பலாத்காரம், நிலப்பறிப்பு, ஆள்கடத்தல், சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் - என்று அதன் வழக்கமான அராஜகங்கள் இன்றும் தொடர்கின்றன. ஐ.நா.வின் குழுவையே உள்ளே விடமாட்டோம் - என்று இலங்கை முரண்டு பிடிக்கிறதென்றால், அந்த அளவுக்கு  இந்தியா முட்டுக் கொடுக்கிறது என்றுதான் அர்த்தம்.

இலங்கை நடத்திய படுகொலைகளைப் பற்றி விசாரிக்க ஐ.நா.வும் சர்வதேசமும் தேவையில்லை, இலங்கையே விசாரித்துக் கொள்ளும் - என்று ஈவிரக்கமின்றி இந்தியா வாய்தா வாங்கிக் கொடுக்கிறது. அந்த அவகாசத்தில், முள்ளிவாய்க்கால் வரை,  தமிழரின் பூர்விகத் தாயகமெங்கிலும், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரை உழுது புதைத்துவிட்டு, ரசாயனக் கலவைகளைத் தெளித்துவிட்டு, மேனி மீது அடிக்கிற பிணநாற்றம் தெரியாமலிருக்க பன்னீரைத் தெளித்துக்கொண்டு காமன்வெல்த் மாநாட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது கொழும்பு.

இந்தியாவின் அனுசரணையுடன், நடந்த இனப்படுகொலைக்கு தடயமே இல்லாமல் செய்துவிட்டதாக நினைத்தது இலங்கை. சேனல் 4 - ஆதாரங்கள் வெளியே வந்தபோது, இலங்கையோடு சேர்ந்து இந்தியாவும் நடுங்கியது. நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போரல்ல, திட்டமிட்ட இன அழிப்பு - என்பது ஒரு சர்வதேச ஊடகத்திடமிருந்து ஆதாரங்களுடன் வெளியாகும் என்று இரண்டு பேருமே எதிர்பார்க்கவில்லை.  சாட்சியமே இல்லை - என்கிற திமிரோடு திரிந்த அவர்களுக்கு, "நோ எவிடென்ஸ், நோ கிரைம்" என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

இப்போது ஆதாரங்களும் வெளியாகின்ற நிலையில்,  ஜனத்தொகையில் பெரிய நாடு என்கிற முறையில்  சர்வதேசத்திடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள மெனக்கெடுகிறது இந்தியா. பேயை அணைப்பானேன்... தீயைச் சுமப்பானேன்!

இலங்கைப் பிரச்சினை - என்பது அன்னை இந்திரா காந்தியின் காலத்தில் இந்தியாவின் ராஜதந்திர வெற்றிக்கு அடையாளமாக இருந்தது. ராஜீவ்காந்தியின் காலத்தில் அந்த அடையாளம் தகர்க்கப்பட்டது. அன்னை சோனியாகாந்தியின் காலத்திலோ, இந்தியாவின் ராஜதந்திரத் தோல்விக்கு அடையாளமாகி விட்டது.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போருக்கு ஆதரவாக இருந்ததன் மூலம், இந்தியாவின் புவிசார் பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டவர் இந்திரா. 'இனப்படுகொலை செய்யாதே' என்று இலங்கையை எச்சரிக்கும் துணிவும் தெளிவும் இந்திராவுக்கு இருந்தது. கூடவே, அந்த எச்சரிக்கை இந்திய நலனுக்குத் தேவையானது - என்கிற தீர்க்க தரிசனமும் இருந்தது. இந்த மூன்றில் ஒன்றுகூட ராஜீவிடம் இல்லாமல் போனது தமிழினத்தின் துரதிர்ஷ்டம்.

ராஜதந்திரமில்லாமலோ இந்தியாவின் நலனைக் கருதாமலோ ஈழ விடுதலைப் போரை தன்னுடைய தாயார் ஆதரித்திருப்பாரா - என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை ராஜீவால். இந்திராகாந்தி, ராஜதந்திர நுணுக்கம் தெரிந்தவர்,  பன்னாட்டு அரசியல் அறிந்தவர். அதனால், இலங்கையின் ஏஜென்டுகளால் அவரை அணுகவே  முடியவில்லை. ராஜீவை அவர்கள் எளிதாக அணுகினர். அவர்களை அவர் முழுமையாக நம்பினார். (போபர்ஸ் ஏஜெண்டுகளையே நம்பியவராயிற்றே அவர்!)  ஜெயவர்தனே தான் நம்பகமானவர் - என்று அவர்கள் சொன்னதையும் நம்பினார். முதலுக்கே மோசம் - என்பதுமாதிரி, இந்திரா மூலம் உருவாகியிருந்த இலங்கை குறித்த தெளிவான பார்வை, ராஜீவின் ஆலோசகர்களால் குழப்பமடைந்தது. அந்தக் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடித்தார் ஜெயவர்தனே.

பாகிஸ்தானைப் போலவே இலங்கையும் பிரிவதுதான் இந்திய நலனுக்கு உகந்தது - என்கிற இந்திராகாந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கும், இலங்கை ஒரே நாடாய் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது - என்கிற ராஜீவ், சோனியா பார்வைக்கும் சம்பந்தமே இல்லை.

ஆயிரமாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகு, மனிதநேய அடிப்படையில் இலங்கை தொடர்பான தெளிவான முடிவை எடுத்தார் இந்திரா அம்மையார். அந்த மண்ணின் பூர்விகக் குடிகளான தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதை இந்தியா மனபூர்வமாக ஏற்கிறது என்பதை அவரது நடவடிக்கைகள் வெளிப்படையாக உணர்த்தின. அவர் ராஜீவ்காந்தியைப் போல், மூடுமந்திரமாகவே இருந்தவர் அல்ல. வெளிப்படையானவர். நல்லதோ கெட்டதோ, ஒளிவு மறைவில்லாமல் பேசியவர், செயல்பட்டவர். அதுதான் இந்திராகாந்தி.

டூன் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு மேதாவிகளின் வழிகாட்டுதல் அடிப்படையிலோ என்னவோ, தாயின் நிலைக்கு எதிர்மாறான நிலையை எடுத்தார் ராஜீவ். போராளிகளைக் கூப்பிட்டு மிரட்டினார், ஜெயவர்தனேயைப் பார்த்து மிரண்டார். 13வது திருத்தம்தான் தீர்வு - என்று ஜெயவர்தனேயுடன் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அடுத்த நாளே, 13-ஐ எதிர்த்துப் பேசிய ஜெயவர்தனேயிடம் - 'இந்தியாவை முட்டாளாக்கப் பார்க்கிறீரா'  என்று கேட்டிருக்க வேண்டாமா ராஜீவ்? கேட்கவில்லை. மாறாக, ஒப்பந்தத்தை ஏற்கிறாயா இல்லையா - என்று தமிழர்களுக்காக உண்மையாகப் போராடியவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.  நீண்டகாலம் போராடிச்  சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்து, ஒரு மெய்யான சுதந்திரப் போரை நசுக்க அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றார்.

தன்னுடைய அரசியல் அறியாமையால் ராஜீவ் மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும், சோனியாவின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பின்னதில், தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் மனப் போக்கும் அரசியல் வக்கிரமும் தூக்கலாக இருக்கின்றன.      லட்சக் கணக்கான தமிழரின் இனப்படுகொலையை விட, தனது கணவரின் படுகொலைதான் தனக்கு முக்கியம் என்கிற சுயம் சார்ந்த நிலையை எடுத்தார் சோனியா. இந்தியாவில் பிறந்த இந்திராவின் புதல்வருக்கே ஈழத்தின் வேதனையையும் வலியையும் புரிந்துகொள்ள முடியாது போன நிலையில், இத்தாலியில் பிறந்த இந்திராவின் மருமகளால் மட்டும் அதைப் புரிந்து கொண்டுவிட முடியுமா?

இந்தியாவின் விருப்பப்படிதான் இனப்படுகொலை நடந்தது - என்பதை முதல் முதலாகச் சொன்னவன் மகிந்த ராஜபக்சே தான். 'இந்தியாவின் போரைத்தான் நாங்கள் நடத்தினோம்' என்று அதிகாரபூர்வமாகவே பேசினான் அவன். அதனால்தான், இனப்படுகொலை என்பது அம்பலமாகிவிட்டால், இலங்கையுடன் சேர்ந்து தானும் உடன்கட்டை ஏறவேண்டியிருக்கும் என்கிற பயத்தில், ஜெனிவாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியாவின் இதயம். கள்ளப் புருஷன்களின் கதை இப்படித்தான் ஆகும்.

தனி நபராக இருந்தாலும் சரி, ஒரு நாடாக இருந்தாலும் சரி, தவறான நபர்களை நம்புவதாலும் நாசம் வரும், சரியான நண்பர்களைச் சந்தேகிப்பதாலும் நாசம் வரும்.
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்
என்று வள்ளுவன் குறிப்பிட்டது இதைத்தான்.

இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறது இந்தியா. உண்மையான நண்பர்களாகவும் இந்தியாவுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருக்கக்கூடிய ஈழப் போராளிகளைப் பகைத்துக் கொண்டது. தனக்கு முந்தானை விரித்தபடியே, சீனாவுக்கும் பாய் விரிக்கும்  இலங்கையை நண்பனாக ஏற்றதன் பலனை இப்போது அனுபவிக்கிறது. இந்தியாவின் வாலில் வந்து சீனாவை உட்கார வைத்திருக்கிறது இலங்கை. நல்ல நட்பு, நல்ல ராஜதந்திரம்!

இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும், இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதில் அதில் பாதி அளவுக்காவது சர்வதேசம் பங்கெடுத்துக் கொள்கிறது. சர்வதேசம் என்பதில், ஐ.நா.வும் உலக நாடுகளும் அடக்கம். அவற்றில் பல நாடுகள், இலங்கை என்கிற இனப்படுகொலைக் குற்றவாளிக்கு ஆயுதம் கொடுத்தவை. அங்கே நடந்த விடுதலைப் போரை - 'பயங்கரவாதம்' என்று இலங்கையும் இந்தியாவும் கயிறு திரித்தபோது கண்டிக்காதவை. அங்கே போர் தான் நடக்கிறது - என்கிற பொய்ப் பிரச்சாரத்தை நம்பியவை.

ஐக்கிய நாடுகள் சபை, கொல்லப்படுவோரின் - கற்பழிக்கப் படுவோரின் எண்ணிக்கையை அது நிகழ்ந்தபோதே அம்பலப் படுத்தியிருந்தால், சர்வதேசத்தில் பெரும் சலசலப்பு எழுந்திருக்கும். அதனாலாவது, இலங்கை தனது திட்டமிட்ட இன அழிப்பை நிறுத்த வேண்டியிருந்திருக்கும். கொலைகார இலங்கைக்குத் துணை நிற்பதில், இந்தியாவுக்கு இணையாக நின்றது ஐ.நா. உரிய நேரத்தில் தகவல் எதையும் வெளியிடவேயில்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்தும், வாயைத் திறக்கவேயில்லை.   ஐ.நா. என்கிற அமைப்பு சர்வதேசத்தின் மீதும் நிகழ்த்திய நம்பிக்கை மோசடி அது.

சர்வதேசம் எப்படி மௌனம் சாதித்தது என்பதையும், நடந்த படுகொலைகளைத் தடுக்கும் பொறுப்பை எப்படித் தட்டிக் கழித்தது என்பதையும், அண்மையில் அமெரிக்கக் குழு ஒன்று அமெரிக்க அரசுக்குத் தெரிவித்துள்ளது. அந்த 2 உறுப்பினர் குழுவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மேடலின் ஆல்பிரைட்டும் ஒருவர்.

"படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படாமல், வெறுமனே கவலை தெரிவித்ததோடு நின்றுவிட்டது சர்வதேச சமூகம். சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில் (இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயத்தில்), அதுகுறித்து விவாதிக்க  ஐ.நா. பாதுகாப்பு சபையோ, பேரவையோ, மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டமோ கூட்டப்படவேயில்லை" என்று அந்தக் குழுவின் அறிக்கை, ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டு 4 ஆண்டு முடிவடைந்தபிறகு குற்றஞ் சாட்டுகிறது.

இதன் பின்னணியிலும் இந்தியாவும் இலங்கையும் தான் இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகத் தெரிகிறது.  ஏனென்றால், ஐ.நா.வின் இந்த மூடிமறைப்பு வேலைகளுக்கான முழுப் பொறுப்பும், அதன் அதிகாரி விஜய் நம்பியாரைச் சேரும். விஜய் என்கிற அந்த மனிதன், கேரளத்து வித்து. சுந்தர வித்தி. பார்ப்பதற்கு யோக்கியன் மாதிரியே இருக்கிற இனப்படுகொலைக் கூட்டாளி. இலங்கை ராணுவத்தின் ஆலோசகராக, அந்தச் சமயத்தில் இருந்தவன் விஜயின் சகோதரன் சதீஷ் நம்பியார். இந்த அபூர்வ சகோதர்களுக்குப் பின் இந்தியா அரூபமாக நின்றிருக்காதா என்ன!

இந்த மூடி மறைப்பு வேலைகளுக்காக சதீஷ் மூலம் விஜய்க்கு இலங்கை கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்திருக்கவேண்டும். விழுகிற ஒவ்வொரு பிணத்துக்கும் இத்தனை டாலர் - என்று பேரம் பேசிக் கூட வாங்கியிருக்கக்கூடும் ஈவிரக்கமற்ற நம்பியார்கள். இது போகிற போக்கில் நான் தெரிவிக்கிற குற்றச்சாட்டு அல்ல! 2008 - 2009ல் ஐ.நா.வின் கள்ள மௌனத்துக்கு இதைக்காட்டிலும் வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என்பதால், அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறேன் இதை! விஜய் நம்பியார் ஒருவனுக்குத் தான், களத்திலிருந்த ஐ.நா. பணியாளர்கள் மூலம், ஈழத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது உடனுக்குடன் தெரிந்திருக்கும். வேறு எதற்காக அவன் அதை மூடி மறைத்திருப்பானென்று நினைக்கிறீர்கள்?

ஒரு விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்காக எத்தனை லட்சம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை - என்கிற முடிவோடுதான்,   தமிழின அழிப்பைத் தொடங்கியது இலங்கை. அதன் பின்னணியில் இந்தியா தான் இருந்தது என்பது திட்டவட்டமான உண்மை. இனப்படுகொலை நடப்பது வெளியே தெரிந்துவிட்டால் அதை நிறுத்த நேரும் என்பதால், அதை மூடி மறைக்கும் வேலை விஜய் நம்பியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேசத்தின் முகத்திலும் அவன் கரிபூசிக் கொண்டிருந்தான். ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு உலைவைத்தது இந்த நாசகாரக் கூட்டணி அன்றி வேறெது?  இன்றைக்கு, நடந்தது இனப்படுகொலை என்பது அம்பலமாகிவிட்டால், ராஜபக்சேவுடன் சேர்ந்து கூண்டில் நிற்க வேண்டியிருக்கும் என்கிற அச்சத்தில், அதை மூடி மறைக்கும் வேலையில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

இனப்படுகொலையை மூடி மறைக்க முயலும் மூவரில், கடைசி இருவரைப் பற்றிப் பேசியாகி விட்டது. அந்த முதல் குற்றவாளி யார்?

13/8/13

பிரபாகரனின் மறுஅவதாரமே விக்கினேஸ்வரன்:


பிர­பா­க­ரனின் மறு அவ­தா­ர­மா­கவே இன்று விக்­கி­னேஸ்­வரன் உரு­வெ­டுத்­துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லிய­னகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனின்  செய்­கை­களும் பேச்­சுக்­களும் திருப்தி தரு­வ­தாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லிய­னகே இவரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்­குகள் ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்­பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குரு­வைக்­கல்லு என்ற தமிழ்ப்­பெ­யரே இன்று குரு­ணாகல் என்று திரி­ப­டைந்­துள்­ளதாகக் குறிப்பிட்ட அவர் குரு­ணாகல் அத்­து­கல்­புர எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட வேண்டும் என்றார்.
2012 கணக்­கெ­டுப்­பின்­படி இலங்­கையில் எட்டு மாவட்­டங்­களில் பெளத்­தர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்சி அடைந்­துள்­ளதாகவும் வடமேல் மாகா­ணத்தில் இது அதி­க­மாக உள்­ளது என்றும் தெரிவித்தார்.
சிங்­க­ள­வர்­களை அழிக்க வேண்­டு­மானால் சிங்­களத் தன்­மையை இல்­லாமற் செய்ய வேண்டும் என்று இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பெளத்த பாரம்­ப­ரி­யத்­தையும் பழ­மை­யையும் ஏனை­ய­வ­ருக்கு விற்று வரு­கின்­றனர் எனவும் குற்றம் சுமத்தினார்.
இந்­தியா அல்ல யுத்­தத்தை வெற்றி கொள்ள உத­விய நாடு என்று தெரிவித்த லியனகே எமது இரா­ணுவ வீரர்­களின் முயற்­சியே வெற்றி பெற்றுத் தந்­தது எனவும் குறிப்பிட்டார். யுத்தப் பிர­தே­சத்தின் 39 அரச சார்­பற்ற அலு­வ­ல­கங்­களில் நவீன பங்­கர்கள் காணப்­பட்­டன எனவும் இவர்­களே இன்று ஜெனீவா சென்று தம்மைத் தூற்­று­கின்­றனர் எனவும் தெரிவித்த அவர் பாது­காப்புச் செய­லா­ளரைக் கொலை செய்ய இவர்­களே வடக்­கி­லி­ருந்து குண்டை தங்கள் வாக­னத்தில் கொண்டு வந்­தனர் என்றும் குறிப்பிட்டார்

12/8/13

காணி பொலிஸ் அதிகாரங்களைச் சட்டரீதியாகவே பெற்றுக்கொள்ளலாம்

:
 
இலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சட்டங்களுக்கே முரணாக வன்னியில் லட்சக்கணக்கான பொதுமக்களை அழித்து சாட்சியின்றி அழித்துவிட்ட இலங்கை பாசிச அரச பயங்கரவாதத்திற்திடமிருந்து அடிப்படை மனித் உரிமைகளையே மக்கள் எதிர்பார்க்காத நிலையில் விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தை வழங்குகிறார். இதற்கு முன்னதாக இலங்கை அரசோடு பேசித் திர்த்துக்கொள்ளலாம் எனக் கூறியவரும் இவரே. இலங்கை அரசுடன் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு தமிழ் மக்கள் சென்றடைந்து அரை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.
இங்கு விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் பிரதினிதித்துவப் படுத்தும் ஒருவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பதே வரலாறு முழுவதும் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கு எதிரான அரசியல்.இதற்கு மேல் அங்கு எதனையும் எதிர்பார்க்க முடியாது

சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

 
 
நாவற்குழியிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிய்லேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு புதிதாகவரும் சிங்களக் குடியேற்ற வாசிகள் தற்காலிகமாகத் தங்கும் மடம் ஒன்றிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள குடியேறிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் காரில் சென்ற சிலர் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இச் செய்தியின் பின் புலம் பெயர் பிழைப்புவாதிகள் அடுத்தகட்ட ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது போன்று ஆர்ப்பரித்துக்கொள்கிறார்கள். முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கை அக்கடுப்பாட்டைப் பேணுவதற்காகவும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உயிர்க்கும் எழுச்சிகளை அடக்குவதற்காகவும் இத் தாக்குதலை இராணுவமே திட்டமிட்டு மேற்கொண்டதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகிறது. புலம் பெயர் நாடுகளின் பிழைப்பு வாதிகள் ஈழப் போராட்டம் ஆரம்பித்துவிட்டதாக மீண்டும் பண வசூலிப்பில் இறங்கினாலும் வியப்பில்லை.
 

11/8/13

இலங்கை நடுங்க ஆரம்பித்துதது விட்டதா ?


இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரசு, ஒரு பஸ் டிரைவரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பஸ் டிரைவரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம்பிள்ளை.
இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா!
 (சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!)
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் ‘இனப்படுகொலை’ என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். அந்த ஒற்றைப் பெண்மணியால் உயிர்த்திருக்கிறது அந்தக் கடுமையான குற்றச்சாட்டு. ‘சர்வதேச சுதந்திர விசாரணையின் மூலமே இலங்கையில் என்ன நடந்தது என்கிற உண்மையை வெளிக்கொண்டுவர முடியும்’ என்று நவ்விப் பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் நவநீதம்பிள்ளை சொல்கிற போதெல்லாம் வியர்த்துப் போகிறது புத்தனின் புத்திரர்களுக்கு!
இத்தனைக்கும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் எவரும், கண்மூடித்தனமாகவோ முட்டாள்தனமாகவோ பேசவில்லை. விசாரணையே இல்லாமல் ராஜபக்சேவைத் தூக்கில் போடு என்றோ, எங்கள் சகோதரிகளைக் கற்பழித்த அவனது உறுப்புகளையோ துருப்புகளையோ உப்புக் கண்டம் போடவேண்டும் என்றோ கோரவில்லை எவரும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்றுதான் சொல்கிறோம். தன்னுடைய உயிர் நண்பனின் அனுக்கிரகத்தால் இத்தனை நாளாகக் குற்றவாளிக் கூண்டில் நிற்காதிருக்கிறது இலங்கை. இன்னும் நீண்ட நாளைக்கு இந்த நாடகம் நீடிக்காது – என்பதை உணர்த்துவதாக இருக்கிறது நவநீதம் பிள்ளையின் விஜயம்.
அடுத்த வாரம் இலங்கைக்குச் செல்கிறார் நவ்விப் பிள்ளை. மழையில் நனைவதற்கு முன்பே சளியில் அவதிப் படுகிற ஆஸ்துமா நோயாளி மாதிரி, இப்போதே நெளிந்துகொண்டிருக்கிறது ராஜபக்சே அரசு.
நவ்விப் பிள்ளையின் பாதுகாப்பு ஆலோசகர், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க இலங்கைக்கு வந்திருக்கிறார். நடந்த இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவனான சரத் பொன்சேகா ‘நான் நவ்விப்பிள்ளைச் சந்தித்தே ஆகவேண்டும்’ என்று ஒற்றைக்காலில் நிற்கிறான். நவ்விப் பிள்ளை நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் தடையின்றிப் போகலாம் – என்று அறிவித்திருக்கிறது இலங்கை. எந்த இலங்கை? ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவைக் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த அதே இலங்கை. அந்த அளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது அது.
நவ்விப் பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கு முன்னோட்டமாக, அவர் அனுப்பிய ஐ.நா. குழு ஒன்று சென்ற ஆண்டு இலங்கைக்கு வந்து சென்றது. ‘இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் பற்றி இலங்கையே நடத்திக்கொள்ளும் விசாரணை நம்பகத்தன்மை அற்றது. இலங்கை அதிகாரிகளின் விசாரணை பாரபட்சமானது. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் – என்று வாக்குறுதி கொடுத்த இலங்கை, அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றெல்லாம் குற்றஞ்சாட்டிய அந்தக் குழு, சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்வதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியது. அந்தக் குழுவின் அறிக்கை, அடங்காப்பிடாரி இலங்கையின் பிடரியில் விழுந்த அடி.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.நா. அமைப்புக்குள் இருந்துகொண்டே, ‘இறுதிப் போர் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஐ.நா. தனது கடமையை ஆற்றத் தவறிவிட்டது’ என்று நவநீதம் பிள்ளை ஒளிவு மறைவின்றிப் பேசியது, ஐ.நா.வுக்குள் இருக்கும் இலங்கையின் ஏஜென்டுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னைத் தானே விசாரிக்க இலங்கை அமைத்த எல்.எல்.ஆர்.சி. விசாரணை ஆணையம் ஒரு மோசடி – என்பதையும், வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள் அச்சத்துடனேயே வாழ்கின்றனர் – என்கிற உண்மையையும் உலகறிய எடுத்துச் சொல்லி இலங்கையை மேலதிக அச்சத்தில் ஆழ்த்தினார் அவர்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்க வேண்டியது. பல்வேறு நெருக்கடிகள் மூலம், அவரது வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது இலங்கை. அவர் வருவதை நீண்ட காலத்துக்குத் தடுக்க முடியாது – என்பதை உணர்ந்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச்சில் அவரைச் சந்தித்துப் பேச ஒரு குழுவை அனுப்பத் தீர்மானித்தது. அந்தக் குழு, நவ்விப் பிள்ளையிடம் – தமிழர் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், மீள் குடியேற்றம், மறு சீரமைப்பு – பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லும் என்று செய்திகள் வந்தன. (இந்த வார்த்தைகளுக்கான ராயல்டியை நாச்சிகளுக்கும் நா.சா.க்களுக்கும் கொடுத்தார்களா இல்லையா!) இதுபோன்ற வார்த்தை ஜாலங்களால் ஏமாந்துவிட நவ்விப் பிள்ளை ஒன்றும் அமெரிக்காவோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கிடையாது என்பதை, இலங்கை இப்போது உணர்ந்திருக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டதும், நவநீதம் பிள்ளை சொன்ன வார்த்தைகள் மறக்க இயலாதவை. “உலகின் எந்த மூலையில் எவர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கான குரலாக மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்” என்றார் அவர். அப்படிச் சொல்வதற்கான தகுதி அவருக்கு இருந்தது. ஐ.நா.வில் பொறுப்பேற்கும் முன், சுமார் 8 ஆண்டுகள், ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரித்த சர்வதேச குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த அவர்தான், அதன் தீர்ப்புரையை எழுதியவர்.
இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான, ஜீன் பால் அகாய்ஸு – என்பவருக்கு அந்த நடுவர் மன்றம் கொடுத்த தண்டனை உலக வரலாற்றில் மிக முக்கியப் பதிவு.
1994ல், ருவாண்டா நாட்டில் டூட்ஸி இனத்தவருக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. அந்த நாட்டின் ஜனநாயகக் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளில் ஒருவர், ஜீன் பால் அகாய்ஸு. முன்னாள் ஆசிரியரான அவர், சமயோசிதத்துக்குப் பெயர்பெற்றவர். டாபா பகுதி மேயராக இருந்த அவரது பொறுப்பில்தான் அந்தப் பகுதி காவல்துறை இயங்கியது. அவரது பகுதியில், ஹூடூ இனத்தைச் சேர்ந்தவர்களால் டூட்ஸி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர், பாலியல் வன்முறை முதலான பல்வேறு கொடுமைகள் வேறு. அகாய்ஸுவால் அந்தக் கொலைகளையும் கொடுமைகளையும் தடுக்க முடியவில்லை.
விசாரணையில், அந்தப் படுகொலைகளைத் தடுக்க அகாய்ஸு முயலவேயில்லை என்பதும், அவரது மேற்பார்வையிலேயே அவை நடைபெற்றன என்பதும், கொல்லப்பட வேண்டிய டூட்ஸி இனத்தவரின் பட்டியலை ஹூடூ இனத்தவருக்கு அவர்தான் கொடுத்தார் என்பதும், உயிருக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்த டூட்ஸி இனத்தவரைத் தேடிக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதும் அம்பலமானது. (ஈழத்திலும் இதெல்லாம் அம்பலமாகாமல் போகுமா என்ன?)
இனப்படுகொலை நடந்த அடுத்த ஆண்டு ஜாம்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார் அகாய்ஸு. ருவாண்டா இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒப்படைப்பதற்காக, குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை நாடுகடத்திய முதல் ஆப்பிரிக்க நாடு ஜாம்பியா தான்.
அகாய்ஸு மீது, இனப்படுகொலை, மனித இனத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை தொடர்பான ஜெனிவா கன்வென்ஷன் மீறல் – உள்ளிட்ட 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
“அகாய்ஸு-க்கு நடந்த கொலைகளில் நேரடித் தொடர்பு இல்லை, அதைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு அதிகாரமும் இல்லை. டாபா மக்களின் வெறிச் செயல்களுக்காக, அகாய்ஸு பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது. நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த நடுவர் மன்றம் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 – ல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் அடிப்படையில், அகாய்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள அகாய்ஸு, இப்போது மாலி சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இனப்படுகொலை – என்பதைக் குறிக்கும் ‘ஜெனோசைட்’ என்கிற வார்த்தை 1944க்குப் பின்தான் உருவானது. ஜெனோ – என்பது ‘இனம்’ அல்லது ‘இனக்குழு’ என்பதைக் குறிக்கும் கிரேக்க வார்த்தை. சைட் – என்பது படுகொலையைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை.
போலந்து நாட்டு யூதரான சட்ட வல்லுநர் ரபேல் லெம்கின் தான், நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையைச் சுட்டிக்காட்ட இந்த வார்த்தையை முதல்முதலாகப் பயன்படுத்தியவர். அவரது தொடர் முயற்சிகளால், 1948ல், இனப்படுகொலையைக் கொடிய குற்றமாக ஐ.நா. அறிவித்தது. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கவும் தண்டிக்கவும் 1948ம் ஆண்டே ஜெனிவா கன்வென்ஷன் உருவானாலும், அதன் அடிப்படையில் முதல் முதலாகத் தண்டனை வழங்கியது, நவநீதம் பிள்ளை இடம்பெற்றிருந்த ருவாண்டா இனப்படுகொலைக்கான நடுவர் மன்றம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பு திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. ஒரு பட்டிமன்றத்திலேயே கூட திட்டவட்டமான தீர்ப்பைத் தெரிவிக்காமல், வழவழா கொழகொழா என்று தீர்ப்பு வழங்கும் நாம், அதன் சில பகுதிகளைத் தெரிந்துகொண்டாக வேண்டும்.
“படுகொலைகள், சித்ரவதைகள், கற்பழிப்பு உள்ளிட்ட மானுட விரோதச் செயல்கள் அனைத்தும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படும்……..
கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை இனப்படுகொலைக் குற்றமாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்……
டூட்ஸி இனத்தை அழித்து ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தப் பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பழிப்புகள் திட்டமிடப்பட்ட முறையில் நடந்திருக்கின்றன. டூட்ஸி இன மகளிர் மட்டுமே இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து, இந்தப் பாலியல் பலாத்காரங்கள், டூட்ஸி இனத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது……
ஒருவரது விருப்பத்துக்கு மாறாக அவரை பலவந்தப்படுத்தி உடல்ரீதியாக பலாத்காரம் செய்வது – கற்பழிப்பு. அதுவும் இனப்படுகொலையே! ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சிறிது சிறிதாகவோ முழுமையாகவோ அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படுகிற இத்தகைய குற்றம் நிச்சயமாக இனப்படுகொலை தான்”……………………..
இவையெல்லாம் அந்த நடுவர் மன்றத் தீர்ப்பின் சில பகுதிகள். (டூட்ஸி என்று வரும் இடங்களில் ‘தமிழ்’ என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்… உள்ளம் கொதிக்கும்!)
போர்க்களங்களில் கற்பழிப்பெல்லாம் சகஜம் – என்று சொல்லும் வக்கிரபுத்தி பிடித்த மிருகங்களை நவநீதம் பிள்ளை கடுமையாகச் சாடியிருந்தார். ‘கற்பழிப்பு என்பது போரில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிச் சின்னம் கிடையாது. இனி, அது கொடிய போர்க் குற்றம், இனப்படுகொலையாகவே அது கருதப்படும்’ என்றார் பிள்ளை.
அந்த நவநீதம் பிள்ளை தான் இப்போது இலங்கைக்கு வரப் போகிறார். உள்ளூரில் ஓணான் பிடித்து அடுத்தவன் வேஷ்டிக்குள் விட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்த மகிந்தன் கோஷ்டிக்குக் காய்ச்சல் வருமா வராதா?
இப்போது பஸ் டிரைவர் விஷயத்துக்கு வருகிறேன். நவநீதம் பிள்ளை, தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் ஒரு வறிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்த, இந்தியக் குடிவழித் தமிழர். அவரது தந்தை, பேருந்து ஓட்டுநராக இருந்தவர். வறுமையில் வாடினாலும், அறிவுத் திறன் நவநீதம் பிள்ளையின் செல்வமாயிருந்தது. உள்ளூர் இந்தியர்களின் உதவியுடனேயே சட்டம் படித்த அவர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையைப் பெற்றது சாதாரண சாதனையல்ல!
பிள்ளையின் கணவரும் ஒரு வழக்கறிஞர், நிறவெறி வெள்ளை அரசுக்கு எதிராக மண்டேலா நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர். கணவர் உள்பட நிறவெறிக்கு எதிராகப் போராடிய போராளிகளுக்கு தக்க சமயத்தில் தேவையான சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் நவநீதம் பிள்ளை.
1973ல், ரொபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டேலா உள்ளிட்ட அரசியல் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திக்க சட்டப்படியான உரிமையை வாதாடிப் பெற்றவர் நவநீதம் பிள்ளை. நிறவெறியிலிருந்து விடுபட்ட பிறகு, 1995ல் தென் ஆப்பிரிக்க உயர்நீதி மன்றத்தில் பிள்ளை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியக் குடிவழித் தமிழர் அவர்தான்.
முன்னதாக, 1967ல் நேட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்க நவநீதம் பிள்ளை முயன்றபோது, எந்த சட்ட ஆலோசனை நிறுவனமும் அவரைச் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வெள்ளையரல்லாத ஒரு வழக்கறிஞரின் கீழ் வேலை செய்ய விரும்பமாட்டார்கள் என்பதே அதற்குக் காரணம். வேறு வழியில்லாமல் தனியாக வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார் பிள்ளை. அப்படி தனக்கென்று ஒரு அலுவலகம் ஏற்படுத்திக் கொண்ட முதல் பெண் வழக்கறிஞர் அவர்தான்.
வெள்ளையரல்லாத வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அறைக்குச் சென்று அவர்களைச் சந்திக்க முடியாத நிலை அப்போது இருந்தது. ‘நீதிபதியின் அறைக்குள் ஒரு நீதிபதியாகவே தான் நான் நுழைய வேண்டியிருந்தது’ என்றார் நவநீதம் பிள்ளை, 1995ல் நீதிபதியாக நியமிக்கப் பட்ட பின், நகைச்சுவை உணர்வுடன்!
2008ல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம் பிள்ளையை நியமிக்க பான் கீ மூன் முடிவெடுத்தபோது, அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது. என்றாலும், அனைத்துத் தகுதிகளின் அடிப்படையிலும் ஏகமனதாக அவர் நியமிக்கப்பட்டார். 2012ல் மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட பிள்ளை 2014 வரை, அந்தப் பொறுப்பில் இருப்பார். அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இலங்கை.
நவநீதம் பிள்ளையின் நேர்மையும் அஞ்சாமையும் அனுபவமும் அறிவும் தெளிவும், செய்த இனப்படுகொலையை, நடத்திய பாலியல் வன்முறைகளை மூடி மறைக்க இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தகர்த்து எறிந்துவிடும் என்கிற அச்சத்தில் இலங்கையும், நம்பிக்கையில் நாமும் இருக்கிறோம்.
அன்று நீதிபதியின் அறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நவநீதம் பிள்ளை, நீதிபதியாகவே அந்த அறைக்குள் நுழைந்து வரலாறு படைத்தார். இன்று, இலங்கைக்குள் நுழைவதற்கான தடங்கல்களையெல்லாம் தகர்த்து அங்கே செல்கிறார். அங்கும் அவர் வரலாறு படைப்பார் என்பது நிச்சயம். ருவாண்டாவில் டூட்ஸி இன மக்களுக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் தமிழ் மக்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?
காமன்வெல்த் மாநாட்டை எப்படியாவது நடத்தியாக வேண்டும் இலங்கைக்கு. இப்படியொரு இக்கட்டான நிலையில் நவநீதம் பிள்ளை வருவதைக் குறுக்குவழிகளில் தடுக்க முயல்வது தற்கொலை முயற்சியாகிவிடும் என்பதால், அத்தகைய முயற்சிகளில் இலங்கை இறங்காது.
இதையெல்லாம் பேசும் இந்த நேரத்தில், தமிழினத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையே உள்ள டூட்ஸி இன மக்களுக்கு ஒரு சில ஆண்டுகளிலேயே கிடைத்த நீதி, 4 ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்கும் எழும். நீதி கிடைப்பதில் ஏற்படும் இந்தக் காலதாமதத்துக்குக் காரணம் யார் யார்? மூன்று விரல்களை நீட்ட வேண்டியிருக்கிறது

10/8/13

சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கும்,,,,


சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. சமானியத் ஈழத் தமிழர் ஒருவருக்குக்கூட சுய நிர்ணய உரிமை என்பதன் பருமட்டான அர்த்தம் தெரியும். இந்த நிலையில் தமிழ் ‘தேசிய’ கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கருத்தளவில் கூடப் பேச மறுக்கிறார். லண்டனிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கேள்வியெழுபிய போது, அது அரசியல் வாதிகளுக்குரியது எனவும் நான் அரசியல் வாதி எனவும் பதிலளித்துள்ளார். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டதால் தான் தாம் அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைத்தது என்று இன்னொரு நேர்காணலில் தான் அரசியல் வாதி என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
இன்னொரு நேர்காணலில் வடமாகாணத்திற்கு அங்கீகாரம் கேட்கவே தேர்தலில் பங்காற்றுகிறோம் என்று வடக்குக் கிழக்கு பிரிக்கப்பட்டமையை அங்கீகரிக்கிறார்.
இன்று சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை மக்களது அங்கீகாரத்தோடு நிராகரிக்கும் தோற்றப்பாட்டை உருவாக்கவே விக்னேஸ்வரன் முடுக்கிவிடப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமைக்கான போராட்டத்தினை நிராகரிக்கும் இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலாகவே வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கை இந்திய அரசுகளிடம் நட்புரீதியான உறவைப் பேணும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் டக்ளஸ் குழுவும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு அடிப்படையில் எதிரானவர்கள். வடக்கு மக்கள் இந்தத் தேர்தலை நிராகரிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை

அமரிக்க இரும்புத்திரை : ஜேர்மனிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய


ஜேர்மனிய அரச உளவுத்துறை BND 500 மில்லியன் மின்னஞ்சல் தொடர்புகள், தொலைபேசித் தொடர்புகள் அடங்கிய தகவல்களை அமரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு மையத்திற்கு வழங்கியுள்ளது. அமரிக்க உளவுத்துறைக்கு ஜேர்மனிய அரசு வழங்கிய தகவல்கள் ,மின்னஞ்சல், தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய நாளாந்த மற்றும் மாதந்த தகவல்கள். அமரிக்க அரசு கொலைவெறியோடு தேடியலையும் எட்வார்ட் ஸ்னோடென் வெளியிட்ட தகவல்களின் மேற்கோள் காட்டி ஜேர்மனியிலிருந்து வெளியாகும் நாளிதழான Der Spiegel இல் இத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அமரிக்காவின் மக்களை உளவறிந்து கண்காணிப்பது தொடர்பாக தமக்கு எதும் தெரியாது என்றும் பத்திரிகைச் செய்திகளூடாகவே அறிந்து கொண்டதாகவும் ஜேர்மனிய அதிபர் அஞ்செலா மார்கெல் கூறியிருந்தார். ஜேர்மனிய உளவுத்துறை ஆப்லானிஸ்தன் குறித்தே தாம் தகவல் வழங்கியிருப்ப்தாகக் கூறுகிறது.
வெளியான தகவல்களில் ஜேர்மனிய அரச உளவுத்துறையின் 12 உயர் மட்ட உறுப்பினர்கள் அமரிக்க உளவுத்துறையால் அழைக்கப்பட்டதாகவும் தரவுகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வது குறித்துப் பேச்சுக்கள் நடத்தியதாகவும் தெரியவருகிறது.
ஐரோப்பிய நாடுகளும் அமரிக்க அரசும் தமது மக்களைச் மேலும் சுரண்டுவதற்கு பல்தேசியப் பெரு நிறுவனங்களுக்கு வழிகளைத் திறந்துவிட்டுள்ளன. இந்தச் சுரண்டலுக்கு எதிராக உயிர்பெறக்கூடிய போராட்டங்களை எதிர்கொள்ள மக்கள் மீதான் ஒடுக்குமுறையை த்திவிரப்படுத்திவருகின்றன. இதுவரைக்கும் மூன்றாமுலக நாடுகளின் மக்களைச் சூறையாட அங்கு பாசிச அரசுகளை அமைத்து அனுபவமுள்ள ஐரோப்பிய அரசுகள் தமது சொந்த நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களைச் சிறைவைக்கும் இரும்புத்திரையைக் கட்டமைத்து வருகின்றன.

9/8/13

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டு


 
இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.
அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கும் இந்தத் தொண்டு நிறுவனம், இலங்கையில் வடக்கு, கிழக்கு, மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போரினால் தாய், தந்தை மற்றும் குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறது.
முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழக புகுமுக வகுப்பு ( க.பொ.த. உயர் தரம்) வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் இந்த உதவித்திட்டத்தினால் நல்ல பலனையும் பயனையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியினைப்பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தமது பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து, பட்டமும் பெற்று தொழில் வாய்ப்புகளும் பெற்றுள்ளனர்.
போரில் தமது கால் இழந்த சில மாணவர்களும் இந்நிதியத்தின் ஆதரவுடன் தமது கல்வியை தொடருகின்றனர்.
ஒரு மாணவருக்கு உதவ விரும்பும் அன்பர் மாதாந்தம் கூ 21 அவுஸ்திரேலியன் வெள்ளிகளை வழங்குவதன் மூலம் ஒரு மாணவர், தனது கல்வியை நிறைவு செய்யும் வரையில் உதவமுடியும்.
உதவி பெறும் மாணவரின் பூரணவிபரங்கள் உதவும் அன்பருக்கு தரப்படுவதுடன், மாணவரின் கல்வி முன்னேற்றச்சான்றிதழ் மற்றும் உதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் முதலானவற்றையும் நிதியம் அன்பர்களுக்கு அனுப்பிவைக்கும்.
மாணவருக்கு உதவும் அன்பர்கள் விடுமுறை காலங்களில் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில், தாம் உதவும் குறிப்பிட்ட மாணவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நடைமுறையினால் பல உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் உதவிய மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் மேலதிக தேவைகளையும் கவனித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி கடற்கோளினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்னியில் நடந்த போரினால் பாதிப்புற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மாணவர்களுக்கும் உதவி வழங்கியிருப்பதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி நலன்களை கவனித்து, அவர்களை விடுவித்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்பு பரீட்சைகளில் அவர்கள் தோற்றுவதற்கும் பெற்றோர்களிடம் இணைந்துகொள்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
நிதியத்தின் 24 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் தகவல் அமர்வும் மெல்பனில்,
வேர்மன்ட் சவுத் சமூக இல்லத்தில் எதிர்வரும் 19-10-2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்
Vermont South Community House – Karobran Drive,
                                  Vermont South, Victoria 3133, Australia
மாணவர்களுக்கு  உதவ விரும்பும்  அன்பர்கள்  கல்வி  நிதியத்தின்  மின்னஞ்சலிலும்  தொடர்பு  கொள்ளலாம்.  நிதியத்தின்  பணிகளை  இணையத்தளத்திலும்  பார்வையிடலாம்
E.Mail: kalvi.nithiyam@yahoo.com                       Web: www.csefund.org

அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ள

 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பின் கனேடிய கிளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று கனடா புறப்பட்டுச் சென்றனர். கனடாவில் சில தினங்கள் தங்கியிருக்கும் அவர்கள் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளனர். இதன் போது அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும் திட்டமிருப்பதாகவும், இதில் வடக்கு மாகாண சபை தேர்தல் விடயங்கள்
 

6/8/13

நிலத்தொடர்பினாலும்சட்டரீதியாக பிரிக்கப்படுவிட்ட தமிழரின் பூர்வீகத் தாயகம்



ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது.

வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிராயுதபாணிகளுடனான யுத்தத்தையே இன்று முல்லைத்தீவு களத்தில் சந்திக்கின்றது. அழுத்தம் கொடுக்காத அர்த்தமற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகினவே தவிர அதற்கு அப்பால் எதனையும் சாதித்திராத நிலையில் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடர்கிறது.
மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் உண்மையான நிலவரங்கள் வெளிக்கொணரப்படாமல், அதன் தீவிர தன்மையினை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் உணராமலிருப்பது துரதிஸ்டவசமானதே. மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களிலிருந்து 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் தமிழர் நிலங்களில் ஆமை வேகத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட்ட நிலையில், யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அவர்கள் அனைவரும் நிரந்தர குடியிருப்பாளர்களாக பதிவு செய்யப்பட்டு. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கந்தசாமிமலை, எரிந்தகாடு, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, மாரியாமுனை, நித்திகைக்குளம், இலந்தைமுனை, வத்தாமடு, மாணற்கேணி, சாம்பன்குளம், ஆமையன்குளம், சின்னக்குளம், பறையனாறு, ஆலங்குளம், சி«லு£ன் தியேட்டர், புலிபாய்ந்தகல், நாயடிச்சமுறிப்பு, வண்ணாக்குளம், ஊரடித்தகுளம், தடடாமனைக்குளம், பனையாண்டான்குளம், கூவாவடிக்குளம், கூமாவடிக்குளம், கூமாவடிக்கண்டல், சலாத்துவெளி, கிடமங்குடா உள்ளிட்ட தமிழ் கிராமங்கள் இன்று இல்லை. அவை முழுவதும் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டு சிங்களக் கிராமங்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுமாயிற்று.
இவற்றை ஒன்றிணைத்தே வெலிஓயா பிரதேச செயலர் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கிராமங்களில் மக்கள் வாழ்ந்தது மட்டுமல்லாமல், கொக்கிளாய் கிழக்கு, மேற்கு, கருணாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய் வடக்கு, மத்தி, தெற்கு. ஆகிய 6 கிராமங்களில் வாழ்ந்த அடிப்படை வாழ்வாதாரத் தொழிலாக விவசாயத்தை நம்பியிருந்த 90 வீதமான விவசாயிகளின் 2 ஆயிரத்து 590 ஏக்கர் விவசாய நிலம், உள்ளடங்கியிருக்கின்றது.
இந்த விவசாய நிலங்களுக்கு சிறீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மக்கள் இன்றும் வைத்திருக்கின்றார்கள். இந்நிலையில்19.01.2012 இல் மேற்படி 6 கிராமங்களிலும் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது விவசாய நிலங்களில் சென்று விவசாயம் செய்ய முடியவில்லை. மக்களுடைய நிலங்களில் சிங்கள விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருக்கின்றனர்.
இதனால் 6 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் சமகாலத்தில் பட்டினிச் சாவினை எதிர்நோக்கியிருக்கின்றனர். பல குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறும் முடிவினையும் எடுத்திருக்கின்றனர். எனினும் மிகமோசமான இந்நிலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கை கொடுப்பதுடன் மட்டுமே நின்று விடுகின்றனர். மக்கள் வெளிவந்து எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இல்லை.
இவையனைத்திற்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும், ஆக்கிரமிக்கப்படும் இந்தக் கிராமங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பகுதியில் நடைபெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே வடகிழக்கு பிரிப்பு வெறுமனே சட்டரீதியாக மட்டுமில்லாமல், நிலத்தொடர்பினாலும் பிரிக்கப்பட்டுவிட்டது. ஜீரணிக்க முடியாவிட்டாலும் கூட இதுவே மறுக்க முடியாத உண்மையாகும்.
இரண்டு விடயங்கள் இங்கே சிறீலங்கா அரசாங்கத்திற்குச் சாத்தியமாவதை நாங்கள் அவதானிக்க முடிகின்றது. ஒன்று நிலத்தை ஆக்கிரமித்து சிங்கள மக்களை குடியேற்றுவது. மிக முக்கியமான அடுத்த விடயம் தமிழர்களின் பொருளாதார வளத்தைச் சிதைப்பது. ஏனெனில் மாவட்டத்தின் பொருளாதார வளத்தின் மிகப் பிரதானமான இரண்டு துறைகளில் ஒன்று விவசாயம். எனவே இதனைச் சாதாரணமாகப் பார்க்கமுடியாது. 2590 ஏக்கர் விவசாய நிலம் 6 கிராம மக்களடைய வாழ்வாதாரம்.
இது ஒருபுறமிருக்க மாவட்டத்தின் பொருளாதார வளத்திற் மற்றொரு துறையான கடற்றொழில் துறையும் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சுண்டிக்குளம் தொடக்கம் கொக்கிளாய் வரையில் மாவட்டத்தின் கடற்பரப்பு நீண்டிருக்கின்றது. இவை யுத்தத்தின் பின்னர் எதுவித அடிப்படைகளுமின்றி அதிகளவு வளங்களைக் கொண்டிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கின்றது.
கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 1983 ஆம் ஆண்டு இங்கிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது ஒரு சில சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக வந்து தங்கிருந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது இதே இடத்தில் 330 சிங்கள குடும்பங்கள் நிரந்தரமாக வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பாடசாலை, தேவாலயம், விகாரை, நடமாடும் வைத்தியசேவை, போக்குவரத்து என எல்லாமே பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இவர்களில் 280 குடும்பங்களுக்கு யுத்தத்தின் பின்னரான கடந்த 4 வருடங்களில் கொக்கிளாய் கிராமத்தில் நிரந்தரக் குடியுரிமையும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தங்கியிருக்கும் நிலம் தமிழர்களுடைய விவசாய நிலம். அவர்கள் தொழில் செய்யும் கடல் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்த கடல். இதேபோறு நாயாறு கரையோரத்தில் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் 60 சிங்கள மீனவர்களுக்கு பருவகால தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று அந்தப் பகுதியில் 300 சிங்கள மீனவர்கள் தங்கியிருக்கின்றார்கள். மிகப் பாரியளவு வளங்களுடன் வந்திருக்கும் இவர்களே கடலட்டை பிடித்தல், ஒளிபாய்ச்சி மீன் பிடித்தல், தங்கூசிவலை பயன்படுத்தி மீன் பிடித்தல் போன்ற சிறீலங்கா அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர். இந்த ஆண்டின் முற்பகுதியில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் மாவட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது, இந்த விடயம் தொடர்பில் முழுமையான ஆதாரங்களுடன் மாவட்டக் கடற்றொழிலாளர்கள் அமைச்சருக்கு மனுக் கையளித்தனர். அதனடிப்படையில் ஒருவார காலத்தினுள் அனுமதியின்றி தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கடற்படைக்கும், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இன்றுவரை ஒருவர் கூட அவ்வாறு வெளியேற்றப்படவில்லை. இதேபோல் சுண்டிக்குளம், மாத்தளன், வலைஞர்மடம் போன்ற பகுதிகளிலும் அட்டை பிடித்தலுக்காக பெருமளவு சிங்கள மீனவர்கள் வந்து தங்கியிருக்கின்றார்கள். எங்கிருந்து வந்தனர்? யாருடைய அனுமதியுடன் வந்தனர்? என்பது குறித்தெல்லாம் கடற்றொழில் திணைக்களத்திற்கே தெரியாது. இந்நிலையில் யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து வெறும் வள்ளங்களுடனும், கட்டுமரங்களுடனும் கடற்றொழில் செய்யும் தமிழ் மீனவர்களின் நிலை என்ன?
தங்களுடைய தொழில்களை கைவிட்டு, சிங்கள மீனவர்களுடன் நாள் கூலிக்கு தமிழ் மீனவர்கள் செல்கின்றார்கள். நேற்று வந்து எங்களுடைய மண்ணில், எங்களுடைய கடலில் எஜமானர்களாக சிங்களவர்கள் மாறிவிட்டனர். மிக விரைவில் கொக்கிளாயில் நடந்தது சுண்டிக்குளத்திலும், வலைஞர்மடத்திலும், மாத்தளனிலும் நடக்கும். நிரந்தரமாக வீடுகளும், நிலங்களும் அவர்களுக்கும் வழங்கப்படும் குடியுரிமையும் கூடவே வழங்கப்படும். ஒரு கட்டத்திற்கு மேல் கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மீனவர்கள் கடலில் கால் நனைக்கவும் கூட அனுமதி மறுக்கப்பட்டதோ அவ்வாறு இந்தப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்படும்.
அவர்களுக்குப் பாதுகாப்பிற்கு கடற்படை எப்போதும் அவர்களுடனிருக்கும். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லிம் அமைச்சர்களின் ஏற்பாட்டில் மாவட்டத்துடன் எவ்வகையிலும் தொடர்புபடாத முஸ்லிம் மக்களை, ஆயிரக் கணக்கில் முள்ளியவளையில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவை அனைத்திற்கும் காரணம் உணர்ச்சிவசப்படுத்தலுக்கு அப்பால் நியாயத்திற்காக போராடும் அரசியல் தலைமைகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இல்லாமையே. அந்த வரலாற்று இழப்பை ர்காலத்தில் முல்லைத்தீவு மக்கள் நிவர்த்தித்துக் கொள்ளவேண்டும். அதுவே எம் இருப்பை அறுதியிட்டுக் கூறுவதற்கான ஆதிக்கச் சொல்லாக இருக்கும்

3/8/13

பிரபாகரன் வாழ்க: தமிழீழம் மலரட்டும் என கோசமிட்ட வைகோ மீது ?



விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வைகோ கோஷம் எழுப்பினார்.
பிரதமர் தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலையம் அருகே ஜெயில் கார்னர் பகுதியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் வைகோ, மத்திய அரசு இலங்கை அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கோஷங்களை வாசிக்க போராட்டத்தில் பங்கேற்றோர் திரும்பக் கூறினர்.
அப்போது, "விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும், விடுதலைப் புலிகள் வெல்லட்டும்´ என்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான கோஷங்களை, வைகோ எழுப்பினார்.
இந்த கோஷங்களை அப்படியே உளவுப் பிரிவினர் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
திருச்சி மாநகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, இது போன்ற நேரங்களில் பேசுவது சட்டப்படி தவறு தான்.
ஆயினும், தற்போது தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றன.
வைகோ பேசியதை, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அறிக்கையாக அனுப்பி விடுவோம்.
அதன் மீது நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர்வது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்

2/8/13

ஆனந்த் தமிழீழம் மலரும் நேரம்




தலைவர் வரும் நேரம் நெருங்குகின்றது - புது
 வரலாறொன்று எழுகின்றது
 அதிரடி தாக்குதல் ஒன்று தொடங்கபடுவதட்கு முன்னர், போராளிகளுடன் சேர்ந்து தானும் ஒரு போராளியாக தாக்குதல் திட்டத்தினை போராளிகளுக்கு தெளிவு படுத்தும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறப்பு தளபதிகள், சாதாரண போராளிகள் என்ற எந்த ஏற்ற தாழ்வுகளும் இருந்ததில்லை என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு சான்றாகும்.
போராளிகளுடன் சேர்ந்து அடர்ந்த காட்டினில் வெறும் புல் தரையில் சாதரணாமாக உட்கார்ந்து தாக்குதல் வியுகம் பற்றி போராளிகளுடன் உரையாடுகின்ற தேசிய தலைவர்.
தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும், தமது நாட்டை தாமே ஆளும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்களை, எத்தனை துயரங்களை, எத்தனை துரோகங்களை தனித்து நின்று எதிர் கொண்டிருப்பார்.
தனது சொந்த நாளை விட தேச நலமும், தமிழர்களின் நலமுமே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரை தமிழர்களாகிய நாம் பெற்றது எமது பாக்கியமே.
நிச்சயமாக இன்று நாம் அனுபவிக்கும் துன்பங்களையும் துயரங்களையும் வெற்றிகளாக மாற்றி காட்ட தேசிய தலைவர் மிக விரைவில் வருவார். நுட்பமான வியுகங்களாலும், அதிரடி தாக்குதல்களினாலும் பல போர்களை வென்ற தேசிய தலைவரின் இன்றைய அமைதியும் ஒரு நுட்பமான போர் யுக்தியாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவை இல்லை.
வர வேண்டிய நேரத்தில் தேசிய தலைவர் கண்டிப்பாக வருவார். சிங்கள தேசத்துடன் இருக்கும் தீர்க்க வேண்டிய கணக்குகளை நாம் வட்டியுடன் சேர்த்து கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒரு முள்ளிவாய்க்கால் என்ன, தலைவர் நினைத்தால் ஆயிரம் முள்ளிவாய்க்கால்களை பகைவனுக்கு பரிசளிக்க முடியும்.
நிச்சயமாக பரிசளிப்போம்,
பலி தீர்ப்போம்
 பகை அளிப்போம்

1/8/13

கஞ்சா பயன்பாட்டை அந்நாட்டு பாராளுமன்ற

உருகுவேயில் கஞ்சா பாவனை சட்;ட ரீதியாக்கப்பட உள்ளது. அந்நாட்டு பாராளுமன்றில் இது தொடர்பான சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. செனட் சபையிலும் இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், கஞ்சா பயன்பாடு முழு அளவில் சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படும்.உலகின் எந்தவொரு நாட்டிலும் கஞ்சாப் போதைப் பொருள் பயன்பாடு சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படவில்லை.  இதன்படி, கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக உலக வரலாற்றில் உருகுவே இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர். புதிய சட்டத்தின் பிரகாரம் கஞ்சா  போதைப் பொருளை பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் அந்நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்க உள்ளது. கஞ்சா விற்பனையாளர்களும், நுகர்வோரும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்து கொண்டவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட மருந்தகங்களின் ஊடாக குறிப்பிட்ட வரையறையின் அடிப்படையில் கஞ்சா போதைப் பொருளை கொள்வனவு செய்யவும் விற்பனை செய்யவும் முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. உருகுவேயில் பதினெட்டு வயதுக்கும் கூடியவர்கள் மாதாந்தம் 40 கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக

 
ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கப்பலைத் தாக்கி, கடற்படை உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு கடற்படையினரின் சயுரா என்ற கப்பல் மீது இந்த ஆறு புலி உறுப்பினரும் தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் கொழும்பு உயர் நீதிமன்றிடம் சட்ட மா அதிபர் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. நீர்கொழும்பிற்கு அருகாமையில் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த தருணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது