siruppiddy

28/10/13

30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம்


இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம். வேறு எந்த நாடும் இது போன்ற சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து அங்குள்ள விமான நிலையத்திற்கு சீன அரசின் நிதி உதவியுடன் (300 மில்லியன் அமெரிக்க டாலர்) 28 கி.மீ.தூரத்துக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டது.
இந்த விரைவு சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராஜபட்ச பேசும்போது கூறியது:

2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்குப் (பிரபாகரன் மரணமடைந்த நாள்)  பிறகு இலங்கை மண்ணில்  பயங்கரவாதச் செயல்களோ, ரத்த ஆறோ ஓடவில்லை. நாடு அமைதிப் பூங்காவாக மாறியது.

எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மக்கள் எனக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.

இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இதற்காக 6 மாதத்துக்கு ஒரு முறை ஜெனீவா சென்று அதற்கான பதிலை அளித்து வருகிறோம்.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் பற்றி மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றியோ, குண்டு வீச்சுகள் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கவில்லை என்று ராஜபட்ச தெரிவித்தார்.

27/10/13

கல்லறைகளை புதுப்பிப்பவர்கள் கைது செய்யப்படுவர்!



போரின் போது மரணமான விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் கல்லறைகளை அமைக்க யாரும் முயற்சித்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி பிரதேசசபையி;ல் அண்மையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, போரில் இறந்த பொதுமக்கள் மற்றும் மாவீரர்களின் கல்லறைகள் புனரமைக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வடமாகாண சபைக்கு அனுப்புவதற்கும் அங்கு முடிவெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவ்வாறு கோருபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கோத்தபாய எச்சரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.

எனவே யாரும் இறந்துப்போன விடுதலைப் புலிகளுக்கு கல்லறைகளை அமைக்குமாறு கோரமுடியாது என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
கல்லறைகளை அமைப்பதற்காக மயானங்கள் என்ற அடிப்படையில் பிரத்தியேக இடங்கள் உள்ளன.

இதனைத்தவிர வேறு புதிய இடங்களில் கல்லறைகளை அமைக்க முடியாது என்றும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கின் ஆளுநர் சந்திரசிறியை

 பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கை இன்னும் எழுத்து மூலம் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று கோத்தபாய கூறினார்.
ஆளுநர் ஒருவரை நியமிப்பதும் நீக்குவதும் 13வது அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று கோத்தபாய சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் ஆளுநர் பதவியில் சந்திரசிறியை நீக்குமாறு வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஆளுநர் சந்தரசிறியை ஆங்கில ஊடகம் ஒன்று வினவியது.
அதற்கு பதிலளித்த சந்திரசிறி, இதை பற்றி தனக்கு தெரியாது. எனவே எனது தொடர்பான விடயங்களை நீங்கள் மறந்து விடுவது உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார்

26/10/13

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!- 7 பெண்கள் கைது


 
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கிருந்த 7 பெண்களை கைதுசெய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி டின்ஸ்டன் பிளேஸ் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அதனை சுற்றிவளைத்த பொலிஸார் அதனை நடத்திய பெண் உட்பட 7 பெண்களை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள், பத்தரமுல்லை, ஹட்டன், காலி, மதவாச்சி, மீகொட, ஜா-எல, நாராஹேன்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

21/10/13

போராளிகள் மீது படையினரின் தொடரும் அச்சுறுத்தல் - பெண் போராளிகளுக்கு பாலியல் தொந்தரவு


 விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகி தமது இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள முன்னாள் பெண் போராளிகளை விசாரணை என்ற போர்வையில் பாலியல் ரீதியான தொந்தரவுகளை சிறீலங்காப் படைப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர். இது தமிழ் மக்களுக்கு இன்னும் இராணுவத்தின் கெடுபிடி குறையவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் திகிலிவெட்டை கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளிகளிடம் எஸ்.கேவ் (வளைவு) இராணுவ முகாமிருந்து வருவதாக கூறி ஒரு நாளைக்கு இரண்டு மூன்று  தடவைகள் விசாரணை மேற்கொள்வது, பாதுகாப்பு காரணங்களுக்காகவில்லை. மாறாக அவர்களைப் பாலியல் ரீதியாக இம்சப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.
கடந்த முதலாம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்கும்

 இடையில் இரவு பகலாகக் குறைந்தது ஆறு ஏழு தடவைகள் இவர்களிடம் சென்று அச்சுறுத்தித் தொல்லைப்படுத்துவதாக எம்மிடம் முன்னாள்ப் போராளிகள் தெரிவித்திருக்கின்றனர். வீட்டிற்கு வரும் இராணுவ சீருடையணிந்த படையினர், தங்கள் பெற்றோர், சகோதர, சகோதரிகள் முன்னிலையில் பெண் போராளிகளை தனியாக அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதினால் அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விடுபட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில் சிலர் திருமணமாகி தமது கணவர்,  பிள்ளைகளுடன் இயல்பு வாழ்க்கையில் இணைந்துள்ளனர். சிலர் தமது பெற்றோருடன் உள்ளனர்.

 இவர்களின் இயல்பு வாழ்க்கையில் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், அச்சத்தை ஏற்படுத்தி உயிராபத்துக்களையும் உருவாக்கி வருகின்றனர்.
படையினரின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக யாரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலை எற்பட்டுள்ளதாகவும், சமூக வாழ்வியல் ரீதியாக தாங்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கும்

 அவர்கள், நாங்கள் எங்கள் மண்ணைச் சிங்களவனின் கையில் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் அதனை மீட்புக்காக போராடினோம். மக்களையும், போராளிகளையம் ஏமாற்றிய சில கயவர்கள் சிங்கள அரசாங்கத்தின் முன்னிலையில் நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டு போராட்டம்

மௌனிக்க சில சதிகளை செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன், சிங்களம் பெண்ணியத்தையும் காவு கொள்ள உடந்தையாக செயற்பட்டனர்.
தாயகத்தில் ஆணொருவருக்கு நிகராக பெண்கள் உள்ளார்கள் என்பதை, எமது தேசிய தலைவர் அவர்களினால் கட்டியெழுப்பப்பட்ட பெண் போராளிகள் நிரூபித்துக் காட்டினர். இதனால் பெண்களின் பெருமையும் கூடின. பெண்களை அவமதிக்கும் சிங்கள படைகளுக்கும் தகுந்த பாடங்கள் புகட்டப்பட்டன. சுயமரியாதையுடன் பெருமைமிக்கவர்களாக வாழ்ந்தவர்கள், இன்று ஏற்படும் அவமானத்தைக் கூட முறையிட முடியாதளவுக்கு அவர்களின் நிலவரம் மாறியுள்ளது.

இவர்கள் ஏதாவது ஒரு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் முறையிட்டால், தங்களையும், குறித்த படைச் சிப்பாய்களையும் அழைத்து நேருக்கு நேர் விளங்கங்களை கோரி தகவல்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் படையினரால் நேரடியாகவே அவர்களுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படுவதுடன், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமுமில்லை.

படைப் புலனாய்வு எனத் தெரிவித்து தொடர்பேயில்லாத கேள்விகளை முன்னாள் போராளிகளிடம் கேட்கின்றனர். அதுமாத்திரமல்ல, அவர்களை சிங்களப் படைகளில் இணைந்து கொள்ளுமாறும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இத்தனைக்கும் இவர்கள் அனைவரும் புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுப்பு முகாங்களில் படையினரின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள்.

இதேவேளை, இரவு வேளைகளில் படையினர் எனக் கூறிக் கொண்டுவருபவர்கள் உண்மையில் இவர்கள் யார் என்பதைக் கூட அவர்களால் அடையாளப்படுத்த முடியாதுள்ளது. இவற்றுக்கு பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுவருகின்றன. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி தனது தாய் தந்தையரை இழந்த நிலையில், தனிமையில் ஒரு சிறிய பாதுகாப்பற்ற வீட்டில்

இருக்கின்றார். அவர் இவ்வாறான ஒரு சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார். இரவு நேரத்தில் இராணுவப் புலனாய்வுக் எனக் கூறிக் கொண்டு வீட்டினுள் நுழைந்த ஒருவர் அவரின் படுக்கையறை வரைக்கும் சென்றுவிட்டார். இவ்வாறு அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து எங்கும் முறைப்பாடு செய்து நீதி பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள்.

சிங்களப் படைகளினால் நேரடியாக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள முன்னாள் போராளிகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து இயங்கும் கருணா மற்றும் பிள்ளையான் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி  முன்னாள் போராளிகள் ஆண், பெண் இரு தரப்பினரையும் இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு அச்சுறுத்துகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, வெல்லாவெளி, குடும்பிமலை, வேப்பவெட்டவான் பகுதிகளில் இராணுவத்தில் இணையுமாறு வீடு வீடாகச் சென்று வலியுறுத்திவருவதுடன், அவ்வாறு இணையாவிட்டால் உங்களின் பெற்றோருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சுறுத்தியும் வருகின்றனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் சேர்ந்து இயங்கும் கருணா, பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது இரண்டு முன்னாள் போராளிகளை இராணுவத்திற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காவிட்டால் உங்களுக்கு வழங்கப்படும் சம்பளம்

வழங்கப்படமாட்டாது என்று புலனாய்வுப் பிரிவினர்கள் அவர்களை மிரட்ட, அவர்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளை விட்டுவைக்காமல் துரத்துகின்றனர். இவர்களில் திருமணமானவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள் என ஆண், பெண் இரு சார்களையும் வற்புறுத்திவருகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை மற்றும் வாகரை பகுதியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுவதை வெளியில் சென்று யாரிடம் முறையிடுவது என்பது தெரியாத நிலையில் முன்னாள் போராளிகள் அச்சம் கொண்டு பீதியடைந்துள்ளனர். தடுப்பு முகாமிற்கு சென்று கொடுமைகளை அனுபவித்து விடுதலையாகி வீட்டுக்கு வந்த முன்னாள் போராளிகள் மாவட்டத்தில் எங்கு சென்றாலும் அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுவது, தமிழர்கள் எவ்வாறு அடக்கப்படுகின்றார்கள் என்பது நன்கு புரியும்.

ஒரு முன்னாள் பெண் போராளியின் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொண்டு சென்றவர்களைகூட, யார் எதற்காக வந்தனர் என இப்பிரிவினர் கண்காணித்து விசாரணை செய்தாக ஒரு பெண் போராளி தெரிவித்துள்ளார். இதேபோன்று, மாவட்டத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு சில வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டுவருகின்றனர். அவ்வாறு அந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்றால் அடுத்த நிமிடம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரிக்கின்றனர்.

மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இரு மாதத்திற்கு ஒரு தடவை முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர், சிங்கள மொழியில் உள்ள ஏராளமான விண்ணப்பப் படிவங்களை கொண்டு சென்று, அவர்களுக்கு உதவிகள் வழங்குவதாக தெரிவித்து கையெப்பம் பெற்றுச் செல்கின்றனர். ஆனால், எந்த உதவிகளும் வழங்கப்பட்டதில்லை. இது எதற்காக நடைபெறுகின்றது என்று கூட அவர்களுக்குத் தெரியாதுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எங்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி வைத்துள்ளதாகவே ஒரு போராளி தெரிவிக்கின்றார். எனக்கு எந்த நேரம் என்ன நடக்கும் என்பதை கூற முடியாத நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களின் நிலவரங்களை கருத்தில் கொண்டு புலம்பெயர் உறவுகளிடம் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வாழ்கின்ற எமது முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக தங்களால் முடிந்த சிறிய உதவிகளை செய்யுமாறும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.

20/10/13

இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல."


இன்று இக்கட்டில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; சில பெருந்தலைகளுந்தான்!: தமிழ்நதி
பேட்டி: மினர்வா & ‘கீற்று’ நந்தன்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலக மக்களையெல்லாம் அன்பு செய்த எம் தமிழினம் இன்று அகதிகளாக உலகெங்கும் சிதறிப் போயுள்ளது. ‘எங்கள் சகோதரி’ என அறிமுகப்படுத்த வேண்டிய எம்குலப் பெண்ணை ‘ஈழ அகதி’ என்று அடையாளம் காட்டும் துயரத்தோடு, எழுத்தாளர் தமிழ்நதியை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஈழத்தில் போர் உக்கிரமடைந்தபோது, அங்கிருந்து வெளியேறி கனடாவில் சில காலம் வாழ்ந்து, பின்பு தமிழ்நாட்டுக்கு வந்து தங்கியுள்ளார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுதி மூலம் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பைப் பெற்றவர். அண்மையில் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
Tamilnathyதமிழ்நதியைப் பற்றி மேலும் சில கூறுவதற்குப் பதிலாக, அவரது கவிதையே அவருக்கு சிறந்த அறிமுகமாக இருக்கும் என்பதால் அவரது கவிதை ஒன்றை இங்கு தருகிறோம்.
தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்
 ஆயுதங்களைக் கைவிடும்படி
 அறிவித்தல் கிடைத்தது.
நல்லது ஐயா!
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்
 எறிகணைகளுக்கும் விமானங்களுக்கும் தப்பி
 எஞ்சிய வீடுகளையும் கோயில்களையும்
 நாங்களே தரைமட்டமாக்கிவிடுகிறோம்.
கைவிடப்பட்ட கடவுளர் சிலைகளை
 கடலின் ஆழத்துள் புதைத்துவிடுகிறோம்.
சுவர்களிலும் மரங்களிலும்
 எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதறடிக்கப்படும்போதில்
 வழியும் வெண் மூளைச்சாற்றின்
 கனவில் இருப்பவர்களே!
சற்றே அவகாசம் கொடுங்கள்
 எங்கள் குழந்தைகளுக்கு
 நாங்களே நஞ்சூட்டிக் கொன்றுவிடுகிறோம்.
மேலும் நீங்கள்
 வன்புணர்ந்து சிதைக்கவிருக்கும்
 எங்கள் பெண்கள்
 இழிவின்முன் தற்கொலைசெய்துகொள்ள
 சற்றே அவகாசம் கொடுங்கள்.
போராளிகள் ஆயுதங்களைக் கைவிடும்முன்
 கவிஞர்கள்
 தம் கடைசிக் கவிதையை
 எழுதிக் கொள்ளட்டும்.
பத்திரிகையாளர்கள்
'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
 துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
 அச்சொல்லின் மீது காறியுமிழட்டும்.
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
உங்களுக்கும் அது வேண்டியதே.
சுறுசுறுப்பாக இயங்கவிருக்கும்
 உங்கள் வதைகூடங்களைச் சுத்திகரிக்க...
நவீன சித்திரவதைகளில்
 சிறையதிகாரிகள் பயிற்சி பெற...
புகட்டுவதற்கென
 மலமும் மூத்திரமும்
 குடுவைகளில் சேகரிக்க...
நகக்கண்களுக்கென ஊசிகள்
 குதிகால்களுக்கென குண்டாந்தடிகள்…
முகம் மூடச் சாக்குப்பைகள்...
கால்களுக்கிடையில் தூவ
 மூட்டைகளில் மிளகாய்த்தூள்கள்
 மேலும் சில இசைக்கருவிகள்
 வதைபடும்போதில் எழும் கதறலை
 நீங்கள் இசையமைத்து
 பண்டிகைகளில் பாடவிரும்பலாம்.
எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
மறந்தே போனேன்
 எங்களைக் கைவிட்டவர்கள்
 தேர்ந்த சொற்களால்
 இரங்கலுரைகளை முற்கூட்டியே எழுதிக்கொள்ளலாம்.
எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த்த
 ஆட்களையும் அடியாட்களையும்
 தயார்ப்படுத்தியாயிற்றெனில்
 யாவும் நிறைவு.
அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.
நாங்கள் கேட்கும்
 அவகாசத்தை வழங்கி
 தேவரீர் அருள்பாலிக்க வேண்டுகிறோம்.
---------------------
ஈழப்போராட்டம் குறித்து தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றுக்கான பதிலை மின்னஞ்சல் வழியாக தமிழ்நதியிடம் வேண்டினோம். தமிழ்நதியின் பதில்கள் இதோ

 

ஈழச்சிக்கல் தொடர்பாக இன்றைய தமிழகச்சூழல்??


மனிதச் சங்கிலி மற்றும் உண்ணாநிலைப் போராட்டங்கள் பேரணிகள் இவற்றால் செய்யமுடியாத ஒன்றை முத்துக்குமார் என்ற தனியொரு இளைஞன் செய்துகாட்டியிருக்கிறான். அவனது மரணத்தின் பின்பு தமிழகத்தில் பெரியதொரு மாறுதலை, உணர்ச்சி அலையை அவதானிக்க முடிகிறது. அதன் நீட்சியாக பள்ளப்பட்டி ரவி, மயிலாடுதுறை ரவி (இருவர்

 பெயரும் ரவிதான்) இருவரும் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். ஒரு உயரிய நோக்கிற்காக உயிரை விட்டிருக்கிறார்கள் என்றாலும் இது தொடருமோ என்று அச்சமாக இருக்கிறது. உயிரோடு இருந்து சொல்லும் வார்த்தைக்கு மதிப்பில்லாத ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே வருந்தத்தக்கதுதானே? ஒருவன் செத்துத்தான் தன்னைச் சுற்றியிருப்பவர்களை விழிக்க வைக்க வேண்டிய சூழல் ஆரோக்கியமானதல்ல. கத்திச் சொன்னால் கேட்காததைக் கன்னத்தில் அடித்துச் சொல்லவேண்டியிருக்கிறது.

அரசியல்வாதிகளிடமிருந்து ஈழச்சிக்கலை பொதுமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குக் கடத்தியதில் முத்துக்குமாரின் பங்கு அளப்பரியது. தமிழகம் என்றுமில்லாதபடி விழித்துக்கொண்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தமிழகத்தை மீளுறக்கம் கொள்ளச் செய்த நாடகங்களும் பலிக்கவில்லை. இப்போது பாரிய இக்கட்டில் இருப்பவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; தமிழக மக்களை ஏமாற்றுவதில் தோற்றுப் போயிருக்கிற சில பெருந்தலைகளுந்தான்.

புலிகள் நினைத்திருந்தால் இத்தகைய பேரழிவிலிருந்து எப்போதோ மீண்டிருக்கமுடியும்; தேவையில்லாமல் போரை வளர்த்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறதே...
உயிர்வாழ யாருக்குத்தான் ஆசையில்லை? அந்த ஆசை புலிகளுக்கு மட்டும் இருக்காதா என்ன? மண்ணுக்காகத் தங்கள் உயிரை ஈகம் செய்த 22,700 (ஏறத்தாழ) மாவீரர்களுக்கும் வாழ்வு குறித்த காதலும் கனவும் நிச்சயமாக இருந்திருக்கும். தலைவர் பிரபாகரன் அவர்கள் நினைத்திருந்தால் அனுபவித்திருக்கக்கூடிய வசதியான வாழ்வை, அடைந்திருக்கக்கூடிய

 பதவியை நினைத்துப் பாருங்கள். எப்போதும் தலைக்குமேல் மயிரிழையில் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் வாழ்வைத் தேர்ந்தது எதனால்? ஓராண்டல்ல; ஈராண்டல்ல. ஏறத்தாழ 35 ஆண்டுகள் அப்படி வாழ்வதென்பது இலகுவானதல்ல. எதிராளிகள் சொல்லும் பதவியின் பொருட்டும் கூட அத்தகைய வாழ்வு சகிக்கத்தக்கதல்ல. பழகிப் புளித்த வார்த்தைகளில் சொல்வதானால் போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. அதை

எதிர்கொள்ளவும் திருப்பித் தாக்கவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இறங்கிப்போய் இனவாதத்திடம் கையேந்தினால் என்ன நடக்குமென்பதை யாவரும் அறிவர். மலினமான சமரசங்களுக்காக அடிப்படை வாழ்வுரிமைகளை விட்டுக்கொடுக்க இயலாத காரணத்தினால்தான் தொடர்ந்து சமராட வேண்டியிருக்கிறதேயன்றி, போர்வெறியினால் அல்ல.
பொருத்தமான தீர்வை வழங்காமல் ஏமாற்றியும் இழுத்தடித்தும் கொன்றுகுவித்தும் போரை வளர்த்துவருவது ஐயத்திற்கிடமின்றி இலங்கை அரசாங்கம்தான்.

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையா?
Tamilnathyஅது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் 'அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் போர் நடக்கும் வன்னிப் பகுதிக்கு வந்து உண்மை நிலையை அறியவேண்டும்' என்று திரு.நடேசனால் அழைப்பு விடுக்க முடியுமா? விடுதலைப் புலிகள் வேற்றுக் கிரகத்திலிருந்தோ வேறு நாட்டிலிருந்தோ வந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்கே செத்துக்கொண்டிருக்கும் மக்களின் பிள்ளைகள், சகோதரிகள், சகோதரர்கள். தங்கள் பிள்ளைகளை, சகோதரர்களை ஆபத்துக் காலத்தில் விட்டுவிட்டுப் போகமுடியாமல் மக்கள்தான் அவர்களோடிருக்கிறார்கள். தங்களைக் காக்க ஆயுதம் ஏந்தியவர்களை மக்களால் பிரித்துப் பார்க்க முடியாது.

1995ஆம் ஆண்டிலே 'ரிவிரச' இராணுவ நடவடிக்கையின் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் விரட்டியடிக்கப்பட்டபோது, அவர்கள் ஏன் விடுதலைப் புலிகள் இருந்த வன்னியை நோக்கிப் போனார்கள்? புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அண்மையில் இலங்கை இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது, மக்களும் விடுதலைப் புலிகளோடு சேர்ந்து வெளியேறிச் சென்றது ஏன்? மக்களிடமிருந்து புலிகளைத் தனிமைப்படுத்தும் உள்நோக்கோடு 48 மணி நேர போர்நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்தது. வெறும் 65 பேர்தான் வெளியேறிச் சென்றதாகச் செய்திகள் கூறுகின்றன. இதிலிருந்தே தெரியவில்லையா மக்கள் யாரை நம்புகிறார்கள் என்பது?

போர் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களைப் புலிகள் தடுக்கிறார்கள் என்றொரு நச்சுப்பிரச்சாரத்தை வேண்டுமென்றே முடுக்கிவிட்டிருக்கிறது இனவாத அரசாங்கம். தன்னுடைய இனவழிப்பு நடவடிக்கையை உலகின் கண்களின் முன் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் இலங்கை அரசுக்கு இருக்கிறது. 'புலிகள் தடுக்கிறார்கள்...

தடுக்கிறார்கள்' என்று சொல்லிக்கொண்டே அங்கிருக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அழித்துவிடலாம் அல்லவா? மேலும், தன்னினத்தையே அழிப்பதற்குத் துணைபோகும் திருவாளர் கருணா ஜூனியர் விகடனுக்கு அளித்த நேர்காணலில் "முப்பதாயிரம் வீரர்கள் இருந்த புலிகளின் படை இரண்டாயிரத்துக்கும் கீழ் சுருங்கி இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். அப்படியே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், இரண்டரை இலட்சம் மக்களை இரண்டாயிரம் புலிகள் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு அபத்தமானது.
எவ்வித விமர்சனமுமின்றி எத்தனை சதவீதம் ஈழத்தமிழர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள்?

விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். அதுவொரு உணர்ச்சிவசப்பட்ட நிலை. செயற்கரிய செயல்களைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே எழும் வியப்பில் பிறந்த பிடிப்பு அது. அதற்காக எல்லோரும் அப்படியென்றில்லை. விடுதலைப் புலிகளின் இனவுணர்வு, அர்ப்பணிப்பு, தியாகம், கட்டுப்பாடு, வீரம்

இன்னபிறவற்றால்தான் புலிகளை - ஈழத்தமிழர்கள் என்றில்லை- உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் நேசிக்கிறார்கள். எல்லா மனிதர்களையும் போல அவர்களும் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அந்தத் தவறுகளோடும் கூட, விமர்சனங்களோடும் கூட அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள்தான் எங்களுடைய இறுதி நம்பிக்கை

 என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எத்தனை சதவீதமானவர்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. 90 சதவீதத்தினராக இருக்கக்கூடும்.
போரின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் உதவுவது புலிகளா? சிங்களப் படையினரா?

சிங்களப் படைகளா? கொல்பவன் எப்படிக் காப்பாற்றுவான்? ஆபத்துக் காலங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, தூக்கிச் சுமப்பவர்களாக, உறவுகளை இழந்து கதறுபவர்களைத் தேற்றுபவர்களாக விடுதலைப் புலிகள் இருந்ததை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இயற்கைப் பேரழிவான

சுனாமியின்போதும் அதைக் காணமுடிந்தது. பாதுகாப்பு வலையம் என்று அறிவித்துவிட்டு அங்கே மக்களை வரவழைத்துக் குண்டு போட்டுக் கொல்கிறது இலங்கை அரசாங்கம். அண்மையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மீது அகோரமான எறிகணை வீச்சை நடத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களைக் கொன்று தள்ளியது. கேட்டால் 'நியாயமான இலக்கு' என்கிறார் ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான கோத்தபாய ராஜபக்சே. கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களைக் கொன்று 'இலங்கைத் தீவில் இப்படியொரு இனம் வாழ்ந்தது' என்ற சுவடே இல்லாமல்

அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறி ஆட்சியாளர்கள். உயிர்காக்க உதவும் மருந்துகளைக் கூட போர் நடக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்லவிடாமல் தடைசெய்திருக்கிறார்கள். அவர்களாவது... தமிழர்களுக்கு உதவுவதாவது...!
சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா?

ஒரு வாக்கியத்தை ஒருவர் ஏதோவொரு சமயத்தில் சொல்ல ஆரம்பிப்பார். பிறகு அது அவரிடமிருந்து இன்னொருவருக்குக் கடத்தப்படும். சில நாட்களில் அந்த வாக்கியம் தன்னளவில் பொருள் இழந்து எல்லோராலும் சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு வாக்கியமாக மாறிவிடும். 'எந்த அரசாங்கத்தினது காலத்திலும் இப்படியொரு இனவழிப்பு நடந்ததில்லை' என்று சொல்வதுபோலத்தான். 'பழைய காலம் நன்றாக இருந்தது' என்று சொல்வார்களே... அதுபோல. உண்மையில் அது துயர்மிகு காலமாக இருந்திருக்கும்.

சில புலி எதிர்ப்பாளர்களாலும் இலங்கை அரசாங்கத்தாலும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பிரச்சாரங்களில் நீங்கள் கேட்டதும் ஒன்றுதானேயன்றி வேறில்லை. ஏதோவொரு மனக்கசப்பில் விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், புலிகளால் தனிப்பட்ட முறையில்

பாதிக்கப்பட்டவர்களை 'புலியெதிர்ப்புக் காய்ச்சல்' பீடித்திருக்கிறது. மிகுந்த முனைப்போடு, திட்டமிட்டு அவ்வாறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது காழ்ப்புணர்வு கலந்த பரப்புரை உலகநாடுகளில் மறைமுகமாக ஈழப்போராட்டத்திற்கெதிரான சூழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. அது அரசியல் தளத்தில் உள்ளார்ந்து இயங்கி பாதகமான விளைவுகளுக்குக் காரணமாகிறது. இவ்வாறான பரப்புரைகளால் தமது சொந்த மக்களின் நலன்களுக்கே எதிரிகளாகிறார்கள்.

சரி, புலிகள் வேண்டாமென்றால் யாரை நமது பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வது? தனிப்பட்ட வாழ்வின் அற்ப சலுகைகளுக்காக இனவாத அரசாங்கத்தின் கால்களைக் கழுவிக் குடித்துக்கொண்டிருப்பவர்களையா? நமது மக்களைக் கொன்றுகுவிக்க வரைபடம் வழியாக வழிகாட்டிக் கொண்டிருப்பவர்களையா? 'புலிகள் பாசிசவாதிகள்... அவர்கள் வேண்டாம்' என்றால் யாரைத் தொடர்வதென்று கைகாட்டச் சொல்லுங்கள். அந்தப் புனிதர்களின் முகங்களை நாங்களும் கண்டுகொள்கிறோம்.
புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டு, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்புவதாக இராஜபக்ஷே கூறுவதை நீங்கள் நம்புகிறீர்களா? சிங்களவர்கள் ஆட்சியில் வாழ்வதை விரும்புவீர்களா?

இந்த இருண்ட, துயர்படிந்த, கையறு காலத்தில் யாராவது நமக்குச் சிரிப்பூட்ட வேண்டியிருக்கிறது. கோமாளிகளுக்குப் பதிலிகளாக அரசியல் தலைவர்களே தொழிற்படும் காலம்போலும் இது. ராஜபக்ஷே தனது அறிக்கைகளால் எங்களுக்குச் சிரிப்பூட்டிக் கொண்டிருக்கிறார்.

புலிகளை முழுவதுமாக அழிப்பது சாத்தியமா என்பதை ராஜபக்ஷே சிந்திக்க வேண்டும். அவர் விரிக்கும் பொருளில் புலிகள் தோற்றுப்போகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், இறுதிவரை போராடிய அவர்கள் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வென்றவர்களே! அதன் பிறகு போராட்ட வடிவமும் அதில் பங்கேற்கும் ஆட்களும் மாறுவார்கள் அவ்வளவுதான். மக்கள் மனங்களிலிருந்து புலிகள் மீதான அபிமானத்தை ஒருபோதும் அகற்ற முடியாது. 'புலிகளை விரட்டிவிட்டோம்' என்று, துப்பாக்கியை நீட்டிக்கொண்டு அரசாங்கம் கொக்கரிக்கும்போது மக்கள் உள்ளுக்குள் கனன்றுகொண்டுதான் இருப்பார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணில் நடக்கும் அப்பட்டமான இனப்படுகொலைகளால்

கொதித்துப்போயிருக்கிறார்கள். தமிழகத்திலிருக்கும் இனப்பற்றாளர்களும் அப்படித்தான். நாற்காலிக்காகத் தன்னினத்தையே விற்றுப் பிழைக்கிற சிலரைத் தவிர மற்றெல்லோருக்கும் புலிகளின் பின்னடைவு என்பது பெருந்துயரைத் தரத்தக்கதே.

உலகிலேயே வன்முறைகளில் முதலிடம் வகிக்கிற ஒரு நாட்டின் ஜனாதிபதி, வைத்தியசாலைகள் மற்றும் வழிபாட்டிடங்களின் மீது குண்டுபோட்டுக் கொல்லும் இராணுவத்திற்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர், பச்சைக் குழந்தைகளைத் துடிக்கப் பதைக்கக் கொன்றுவிட்டு அதைத் தலைநகரில் கொண்டாடப் பணிக்கிற பண்பாளர் ஜனநாயகத்தை பற்றிப் பேசுவது உங்களுக்கு நகைப்பூட்டவில்லையா?

பெரும்பான்மை ஆட்சியில் நாங்கள் பட்ட, படும் சீரழிவுகள் போதாதா? நாங்கள் பிரிந்துசெல்லவே விரும்புகிறோம்.
'நாம் எடுத்துக்கொண்ட முயற்சியினால் உலகத்தின் கவனம் ஈழத்தமிழர் அவலத்தின் மீது திரும்பியிருக்கிறது' என்ற தொனிப்பட கலைஞர் பேசியிருக்கிறாரே...

இதற்கான பதிலை நாம் அனைவரும் அறிவோம். 'தாம் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறார்கள். இருந்தாலும் ஆண்டவரே! இவர்களை மன்னியும்' என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
உலகநாடுகள் தலையிட்டு ஈழத்தில் அமைதி ஏற்பட்டால், நீங்கள் அங்கு சென்று வாழ விரும்புவீர்களா?

நிச்சயமாக. சொந்த மண்ணில் வாழ்வதைக் காட்டிலும் மகிழ்ச்சி வேறென்ன இருக்கமுடியும்? இதை வெறும் பேச்சுக்காகச் சொல்லவில்லை. புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போய், அங்கே பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தபின், தாயகத்தில் வாழவேண்டுமென்ற ஆசை உந்தித்தள்ள 2003 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றேன். 2006 ஆம் ஆண்டுவரை அங்கேதான் வாழ்ந்தோம். கடுமையான போர்ச்சூழல் இரண்டாவது தடவையாகவும் புலம்பெயர வைத்துவிட்டது. ஓரளவு போர்ப் பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் மீண்டும் ஊருக்குத் திரும்பிப் போய்விடுவேன்

19/10/13

பௌத்த தூபியை கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


 
தமிழர் பகுதிகளில் பௌத்த மேலாதிக்கத்தின் மற்றுமொரு குறியீடாக கிளிநொச்சியில் பெளத்த தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஆகியோரால் இத்தூபி திறந்து வைக்கப்பட்டது.

மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இத்தூபி, கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் முழு ஆதரவோடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கு நீண்டகாமாக புத்த வழிபாடு நடைபெற்றமைக்கு வரலாறுகள் உள்ளதாகவும், முப்பது ஆண்டுகால யுத்தத்தினால் அவை சிதைவடைந்து விட்டதாக ஹிங்குராகந்தே சுமன தேரர் இந்நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.



http://www.navakkri.com/
 

17/10/13

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்வனவு செய்ய

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
   
இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் அவரது சகாக்களும் முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இன்னொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார். பிரதீபன் நடராஜாவுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

16/10/13

காணாமற்போனோர் தொடர்பில் இரு தினங்களில் 1000 பேர் பதிவு


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமற்போனோரைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டன. காணாமற் போன சுமார் 1000 பேர் பற்றிய விவரங்கள் இதன்போது  பதிவு செய்யப்பட்டன.

இந்தப் பதிவு நடவடிக்கை தொடர்ச்சியாக இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்று மன்னார் பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காணமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு ஒத்துழைப்பு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்க காணாமற்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மன்னார் பிரஜைகள் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் செய்யும் இந்தக் குழுவினர் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் சகல இடங்களிலும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய காணாமற்போனோரின் உறவுகள் பொலிஸ் பதிவு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட பதிவுகளின் பிரதிகள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட பதிவு நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணத்தில் 468 பேரும், கிளிநொச்சியில் 537 பேரும் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரையில் பதிவு செய்யத் தவறியவர்கள் இன்றைய தினமும் பதிவுகளை மேற்கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் திருமதி.என்.கமலநாயகி, இல.16, கச்சேரி கிழக்கு ஒழுங்கை என்ற முகவரியிலும் கிளிநொச்சியில் திருமதி யோகராசா கனகரஞ்சினி, இல.59 தொண்டமான் நகர்என்ற முகவரியிலும் பதிவுகளை  செய்ய முடியும். மேலதிக விவரங்களுக்கு யாழ்ப்பாணத்தில் 0212221037 என்ற இலக்கத்துடனும், கிளிநொச்சியில் 07780887759 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு வடக்கு பொதுநோக்கு மண்டபத்திலும், 10 ஆம் வட்டாரம், வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு (தற்போதைய மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமியின் வதிவிடம்) என்ற முகவரியிலும், நாளை வியாழக்கிழமை வவுனியா இறம்பைக்குளம். புனித அந்தோனியார் ஆலயத்திலும் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பதிவுகள் தொடரபில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புவோர மன்னார் பிரஜைகள் குழுவின் செயலர் சிந்தாத்துரையுடன் 0771139897 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

15/10/13

நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம்:


முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் கூட்டாக முடிவெடுத்த சிவசக்தி ஆனந்தனுக்கு மன்னார் ஆயர் செய்தி அனுப்பியதால் கைவிடப்பட்டதாக கூறினார். ஆனால் அவரும் என்னிடம் கூறவில்லை. மன்னார் ஆயரும் என்னிடம் கூறாமையே நான் முள்ளிவாய்க்கால் செல்லக் காரணம் என விபரிக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.


11/10/13

வடபகுதி பயணிகளிடம் கப்பம்பறிக்கும் கும்பல்!


 வட பகுதியிலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்புக்குச் செல்லும் தனியார் பேருந்துக்களில் கப்பம் கோரும் கும்பலொன்று சூட்சுமமான முறையில் செயற்பட்டுவருவதாக முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

அநுராதபுரம் புதிய பஸ்தரிப்பு நிலையம் மற்றும் பழைய பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் வைத்தே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார்.

தனியார் பஸ்வண்டிகளில் கப்பம் கோரும் கும்பலொன்று ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.

10/10/13

தேர்தல் மேடையும் அலரி மாளிகையும் -


தேர்தல் மேடைகளில் உதிர்ந்த உரிமை முழக்க வார்த்தைகள், இன்னமும் வடக்கின் வசந்தக் காற்றில் உயிர்ப்புடன் தவழ்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில், இறைமை எனும் மையால் வரைந்த எழுத்துக்கள் இன்னமும் காயவில்லை. அவையெல்லாம் மக்களின் உணர்வுகளை வாக்குக்களாக அறுவடை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள்.
வெற்றி பெற்றபின் மக்களின் அபிலாசைகளை கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகளை காண்பதரிது. அதற்குப் பின்னரே அவர்களின் இராசதந்திர அறிவு வேலை செய்யுமாம். அதிகாரத்தைக் கைப்பற்ற முன் பேசுவதற்கும், கைப்பற்றியபின் பேசுவதற்கும் இடையில் இருக்கும் வெளியில், இராசதந்திரம் என்கிற பூச்சு பூசப்படுகிறது. இதனைத் தேர்தல் மேடைகளில் கட்டாயம் பேசக்கூடாது என்பதுதான் இவர்களின் சனநாயகக்கோட்பாடு.
‘மகிந்தரின் முன்னால் பதவிப் பிரமாணம் செய்வேன்’ என்று, மக்கள் முன்னால் சொல்லமாட்டார் விக்கினேஸ்வரன். எந்த முகத்தோடு மகிந்தர், வடக்கு மக்களிடம் வாக்குக்கேட்க வந்துள்ளார் என்று கேட்பார்கள். ஏனெனில், மக்களுக்கு பிடித்த விடயம் அது. வாக்கு வங்கியை அதிகரிக்கும் அருமருந்து.
ஆனால் தாங்கள் செய்யும் கருமங்களுக்கு, மக்களே பொறுப்பு என்று கூறுகின்றார்கள். அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்கிற ஒரே ஒரு அங்கீகாத்தை வைத்துக் கொண்டு, தாங்கள் விடும் தவறுகளுக்கு மக்களையும் பங்காளியாக்கும் இராசதந்திர வித்தை இவர்களுக்கு கைவந்தகலை.
‘மகிந்தர் ஒரு போர்க்குற்றவாளி’, ‘சிங்களத்திற்கு எதிராக சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ள  வேண்டும்’, ‘பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்` என்று உரத்தகுரலில் சத்தம் போட்ட பலர், இன்று என்ன சொல்கிறார்கள்?.
விக்கினேஸ்வரனும், சம்பந்தனும், சுமந்திரனும் எதைச் செய்தாலும், அதற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டுமாம். இனி, தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்பார்கள். சர்வதேச வல்லரசுகளின் நலன்களுக்கு ஏற்றவாறு, தம்மை வளைத்துக்கொண்டு செயற்படுவதே, தமிழ் மக்களுக்கான இராசதந்திரம் என்கிறார்கள். சிங்களத்தின் ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்துள் தோண்டித் துழாவிப்பார்த்து, விக்னேஸ்வரனை நியாயப்படுத்தும் சிறு துரும்பாவது கிடைக்குமாவென்று அலைகின்றார்கள்.
மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தபோதும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை இவர்களே உருவாக்கினார்கள். அமெரிக்கா ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டுவந்த போதே, அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு அல்லது இணக்கப்பாட்டு அரசியலுக்கு மட்டுமே இத்தீர்மானங்கள் பயன்படுத்தப்படுமே தவிர, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை நோக்கி இது நகராது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஏற்றாற்போல், நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கைகளில் ‘சர்வதேச விசாரணை’ என்ற சொல்லாடல் வந்ததும், அமெரிக்கா கூறியே அம்மையார் சொல்கிறார் என்கிறவகையில், தமது கற்பிதங்களை அள்ளிவீசத் தொடங்கினர். எந்த வல்லரசு, சர்வதேச விசாரணையைக் கொண்டுவரும் என்று இவர்கள் நம்பினார்களோ அல்லது நம்பியதுபோல் நடித்தார்களோ, அதே வல்லரசுகளே இனப்படுகொலையாளி முன்னால் தமிழர் தரப்பினை சத்தியப்பிரமாணம் செய்யத் தூண்டுகிறது என்பதுதான் நிஜம்.
ஆனால் இந்த சத்தியப்பிரமாண சங்கதிகள், ஒரு உண்மையை மட்டும் தெளிவாக உணர்த்துகின்றது. அதாவது மகிந்தருடன்  இணங்கிப் போகாமல் துளியளவு அதிகாரத்தையும் பெறமுடியாது என்பதுதான் அந்த உண்மை. இப்போதுள்ள நொய்ந்துபோன 13வது திருத்தச் சட்டத்தில், எதுவுமே கிடையாது என்பதும் இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
இவைதவிர, மக்கள் போராட்டங்களின் ஊடாக உரிமைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபடாமல், தேர்தல் மூலம் உரிமையை வென்றெடுக்க முயற்சி செய்யுங்கள் என்கிற வல்லரசுகளின் அறிவுரையை தெளிவாகத்தான் உள்வாங்கியிருக்கிறார்கள் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களும். அதாவது தீவிர தேசிய அரசியலை தேர்தல் விஞ்ஞாபனத்திலும், மென் அரசியலை சிங்களத்துடனான இணக்கப்பாட்டிலும் பிரயோகித்தவாறு மீதமுள்ள அரசியல் வாழ்வினைக் கழிக்கலாம் என்று முடிவுகட்டிவிட்டார்கள்.
இது அடிப்படையில் மிக மோசமான ஏமாற்று வித்தை. வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக இயங்குவது, அதனை வெற்றிக்கான இராசதந்திரம் என்று பொய் சொல்வது, யாழில் 85 வீதமான மக்கள் வாக்களித்திருந்தும் எம்மிடம் பலம் இல்லையென்று சனநாயகத்தை கேலி செய்வது எல்லாமே, பிழையான தலைமையின் மோசமான பரிமாணங்களாகும்.
இவர்கள் போகும் இந்தப்போக்கு, தேர்தலில் முழங்கிய தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்கிற அடிப்படைப்பிறப்புரிமையை எக்காலத்திலும் பெற்றுத்தரப் போவதில்லை. மந்திரிப்பதவிக்கு அடிபடும் இவர்கள், மக்களின் இழந்து போன உரிமைக்காக எப்படிப் போராடப்போகிறார்கள்?.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்த்தும், மகிந்தரின் முன்னால்தான் சத்தியம் செய்வோம் என்று சம்பந்தன் அடம்பிடிப்பதால், உள்கட்சி சனநாயகம் அங்கு இல்லையென்கிற முடிவுக்கு வரலாம்.
வாக்களித்ததுடன் தமது கடமை முடிந்துவிட்டதென மக்களும், சிவில் சமூகங்களும் அசமந்தமாக இருப்பதால்தான், ஆபத்தான பாதையில் தமிழ்த் தேசிய அரசியல் நகர்கின்றது எனலாம். அவர்களுக்கும் இதில் பொறுப்புண்டு
 

கழுதைகள் வழிகாட்ட முற்பட்டால். சேரமான்


எதிரியிடம் கூனிக்குறுகி மண்டியிட்டு வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் வழிவந்த பெருமை மானமுள்ள ஒவ்வொரு தமிழருக்கு உண்டு.

பண்டைத் தமிழரின் தன்மான உணர்வைப் பறைசாற்றும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இதில் ஒன்று கோச்சேரமான் கணைக்காலிரும்பொறை எனும் சேர மன்னனால் எழுதப்பட்டது. செங்கணான் எனும் சோழ மன்னனுடன் நடைபெற்ற யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு புற்றுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது தனக்கு வழங்கப்பட்ட நீரை அருந்த மறுத்து உயிர்நீக்கும் முன்னர் அப்பாடலை கணைக்காலிரும்பொறை எழுதியிருந்தார். அது வருமாறு:
‘குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்
தொடர்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளீர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’
குழந்தை இறந்து பிறந்தாலும், அல்லது உயிரற்ற வெறும் தசைப்பிண்டம் பிறந்தாலும், அதனை வாளால் கீறி அடக்கம் செய்யும் வீரமரபில் வந்தவன் என்ற வகையில் நாயினும் கீழாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் வயிற்றுத் தீயை அணைப்பதற்காக எதிரியிடம் தண்ணீரைப் பிச்சையாக வாங்கி அருந்துவதை விட செத்து மடிவது மேலானது என்று இப்பாடல் மூலம் தெரிவித்து விட்டு

தனது உயிரை கணைக்காலிரும்பொறை அவர்கள் மாய்த்துக் கொண்டார்.
சங்க காலத்தில் நிகழ்ந்த இவ் அற்புதம் தமிழீழ தாயக மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் மீண்டும் நிகழ்ந்தேறியது. எதிரியிடம் மண்டியிட்டு மானமிழந்து அடிமைகளாக வாழ்வதைவிட இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவுவது மேலானது எனக் கருதி தமிழீழ மண்ணிலும், தமிழீழக் கடலிலும் தமது இன்னுயிர்களை ஆயிரமாயிரம் புலிவீரர்கள் ஈகம் செய்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் எதிரியிடம் சிறைப்பட்ட பொழுதும்கூட தமக்குப் பக்கபலமாக நின்ற மக்களையும், தம்மோடு கூடநின்ற போராளிகளையும் காட்டிக் கொடுக்காது தமது உயிர்களை எத்தனையோ போராளிகள் ஈகம்செய்தார்கள்.

இந்த மான மாமறவர்களின் குருதியின் மீதும், அவர்களின் ஈகத்தின் மீதும் அரசியல் செய்து வாக்குப்பிச்சை கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மகிந்தரின் முன்னிலையில் மண்டியிட்டு கூனிக்குறுகி நிற்பது ஒவ்வொரு மானமுள்ள தமிழரையும் சீற்றம்கொள்ள வைத்துள்ளது.
அதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மாவீரனாக வர்ணித்து தேர்தல் மேடைகளில் முழங்கி வாக்குப் பிச்சை எடுத்த அதே விக்னேஸ்வரன் இப்பொழுது மகிந்தரிடம் மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்திருப்பது எந்தவொரு மானமுள்ள தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் சிங்களத்தோடு ஒட்டி உறவாடித் தனது இரண்டு புதல்வர்களையும் சிங்கள மாமியார்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் என்ற வகையில் இது விக்னேஸ்வரனுக்கு புதிதன்று. எதிரியிடம் மண்டியிடுவதும், எதிரிக்கு அடித்தொண்டு புரிவதும் விக்னேஸ்வரனைப் பொறுத்த வரையில் பழகிப் போன விடயங்கள்தான்.
முதலில் பிரேமதாசாவிற்கும், பின்னர் சந்திரிகாவிற்கும், அதன் பின்னர் சரத் பொன்சேகாவிற்கும் பரிவட்டம் கட்டிப் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஆரத்தழுவி அவரை மகிழ்விப்பதற்காக சிங்கக் கொடியைப் பேருவகையோடு கையில் ஆட்டியசைத்த சம்பந்தருக்கோ அன்றி அவரது வாரிசான சுமந்திரனுக்கோ இது புதிய விடயம் அல்லவே.

ஆனால் சங்கத் தமிழர்களின் வழிவந்து, தமிழீழத்துக் கரிகாலன் பிரபாகரனின் வழிநிற்கும் ஒவ்வொரு மானத் தமிழர்களுக்கும் இது ஏற்புடையதொன்றன்று. அதிலும் தமிழீழ மண்ணை மீட்பதற்காக தமது பிள்ளைகளையும், தாய் - தந்தையரையும், சகோதரர்களையும், உற்ற நண்பர்கள் - உறவினர்களையும் களப்பலிகொடுத்த எந்தவொரு தமிழர்களால் இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று.



சிறீலங்கா அரசியலமைப்பின்படி ஒரு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்பவர் தனது பதவிப் பிரமாணத்தை அரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது மாகாண ஆளுநரின் முன்னிலையில் மேற்கொள்ளலாம். அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள விரும்பாதவர் ஒரு சமாதான நீதவானின் முன்னிலையில் தனது பதவிப் பிரமாணத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மூன்று தெரிவுகள் விக்னேஸ்வரனுக்கு இருந்த பொழுதும்கூட மகிந்தரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அவர் எடுத்த முடிவும், தனது முடிவில் அவரும், சம்பந்தரும், சுமந்திரனும் விடாடிப்பிடியாக இருந்தமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றிய மூன்று செய்திகளை தமிழர்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.

டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், கே.பி போன்ற தேசத்துரோகிகளின் வழியில் ஒட்டுண்ணி அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கப் போகின்றது என்பது முதலாவது செய்தி.


மகிந்தருக்கு எதிராக மேற்குலக தேசங்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களும், பாரத உபகண்டத்தில் தாய்த் தமிழக உறவுகளும், உலகின் ஏனைய பாகங்களில் தமிழகம் - தமிழீழம் ஆகியவற்றை பூர்வீகமாகக் கொண்ட புகலிடத் தமிழர்களும் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதில் சிறீலங்கா தூதரங்களுக்கு உறுதுணையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படும் என்பது இரண்டாவது செய்தி.

மாவீரர்களினதும், மானச்சாவெய்திய மக்களினதும் நிறைவேறாத நெடுநாள் கனவாக விளங்கும் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவை நிரந்தரமாகக் குழிதோண்டிப் புதைப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிபூண்டு நிற்கின்றது என்பது மூன்றாவது செய்தி.

ஈழத்தீவில் தமிழர்களுக்கு உரிமையில்லை என்று கூறிய சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலமும், ரணில் விக்கிரமசிங்கவை திருப்திப்படுத்துவதற்காக சிங்கக் கொடியை பேருவகையோடு ஆட்டியசைத்ததன் மூலமும் ஏற்கனவே தனது ஒட்டுண்ணி அரசியல் மூலோபாயத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்த பொழுதே மகிந்தருக்கு உறுதுணையாக செயற்படும் தனது எண்ணத்தை சம்பந்தர் வெளிப்படுத்தி விட்டார்.

தவிர தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தாய்த் தமிழகத்தையும், தமிழீழத் தனியரசுக் கனவைச் சுமந்து மேற்குலக தேசங்களில் குரல்கொடுத்து வரும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களையும் வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு கூறியதன் மூலம் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவைக் குழிதோண்டிப் புதைக்கும் தனது முடிவை ஏற்கனவே விக்னேஸ்வரும் வெளிப்படுத்தி விட்டார்.

இந்த வகையில் மகிந்தரின் முன்னிலையில் கூனிக்குறுகி மண்டியிட்டு வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் மூலம் தமிழர்களுக்கு விக்னேஸ்வரனும், சம்பந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படுத்தியுள்ள மூன்று செய்திகளும் புதியவை அல்லவே
.
பண்டைய பபிலோன் சாம்ராச்சியத்தின் தளபதிகள் தமது வீரர்களிடம் அடிக்கடி முதுமொழி ஒன்றைக் கூறுவார்களாம். ‘ஒரு கழுதைக் கூட்டத்திற்கு ஒரு புலி தலைவனாகி தலைமைதாங்கினால் அக் கழுதைக் கூட்டம் புலிப்படை போன்று போர்புரியும். ஆனால் ஒரு புலிக்கூட்டத்திற்கு ஒரு கழுதை தலைவனாகினால் அப்புலிப்படை கழுதைக்கூட்டம் போன்று அங்கிங்கென சிதறியோடிவிடும்’ என்பதுதான் அந்த முதுமொழி.

இது இப்பொழுது ஒவ்வொரு தமிழருக்கும் ‘அதுவும் ஒவ்வொரு தமிழீழவருக்கும்’ பொருந்தும். ஏனென்றால் பிரபாகரன் எனும் புலியின் வழிகாட்டலில் புலிகளாக வாழும் எம்மை இப்பொழுது கழுதைக்கூட்டம் ஒன்று வழிநடத்த முற்படுகின்றது. இதனைப் புரிந்து கொண்டு எச்சரிக்கையுடன் நாம் நடந்து கொள்ளத் தவறினால் புலிகளாக விளங்கும் எமது நிலை கழுதைக்கூட்டத்தின் நிலையாகவே மாறிவிடும்.

 

8/10/13

கைக்குண்டொன்று மீட்பு மருதனார்மடம் சந்தியில்


மருதனார்மடம் சந்தியில் உள்ள கடையின் முன்னாள் இருந்து வெடிக்காத நிலையில் இன்று காலையில் கைக்குண்டொன்று இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடைப் பகுதியின் வாசலில் வைக்கப்பட்டு இருந்து இந்த கைக்குண்டு இன்று காலை கடையை திறக்க சென்ற வேளையில் கடை உரிமையாளரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரான எஸ். ஹரிகரன் என்பவருடைய கடை வாசலில் இருந்து இந்த கைக்குண்டு மீட்க்கப்படடுள்ள அதே வேளையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கடை உடைக்கப்பட்டு சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் உட்பட பணமுமம் திருடப்பட்டு பொலிசார் விசாரனைகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் இரண்டாம் நாள் இந்த கைக்குண்டு குறிப்பி;ட்ட கடை

வாசில் வைக்கப்பட்டுள்ளமை பலத்து சந்தேகத்தை எற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்ளனர்

7/10/13

உதவி நிச்சயம்அரசோடு ஒத்துழைத்தால்!மகிந்த


அரசாங்கத்தோடு ஒத்துழைத்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரென்றால் வடக்கின் அபிவிருத்தி, மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க நாம் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற தேநீர் விருந்துபசார நிகழ்வில் சகஜமாக ஜனாதிபதி கலந்துரையாடும்போதே இப்படி கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நான் இந்த நாட்டின் அனைத்து பிரதேச மக்களுக்கும் உரித்தான ஜனாதிபதி. என்னுடைய பணி அனைத்து மக்களுக்கும் உரித்தானது. ஆகையினால் எக்காரணம் கொண்டும் எவ்விதமான பாரபட்சத்தையும் நான் காட்டமாட்டேன்.

உதவி, அபிவிருத்தி என்பன அனைத்து பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியே முன்னெடுக்கப்படும். ஆனால், அந்தந்த உதவிகள் உரியவர்களுக்கும் உரிய பிரதேசத்திற்கும் கிடைக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துடன் சுமூகமாக நடந்துகொள்ள வேண்டும்.

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடந்துகொள்ளுமானால் அபிவிருத்தி, மேம்பாடுகள் வழமைபோல் சுமூகமாக நடைபெறும்” என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டதாக நம்பகரமான வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.{காணொளி}
 

முதலாவது அரசவை நிறைவு! ஒக்ரோபர் 26ல் தேர்தல்!



செயற்பாடுகள் விரிவாக்கப்படும்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்
  அரசாங்கத்தின் முதலாவது அரசவை தனது
ஆட்சிமைக்காலமாகிய மூன்று வருடங்களை நிறைவு செய்துகொள்கின்றமையால் அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளுக்கமைய 2013 ஒக்ரோபர் 1ம் நாளன்று முதலாவது அரசவை கலைக்கப்படுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதேவேளை வரும் (ஒக்ரோபர் 26) தேர்தல் மூலம் தெரிவாகும் இரண்டாம் அரசவையானது தனது பணிகளை தொடங்கும் வரை தற்போதைய அமைச்சரவை தொடந்து நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கமைய தேர்தல் மூலம் புதிதாக அமைக்கப்படும் அரசவை ஐந்து வருடங்களைத் தனது ஆட்சிமைக் காலமாகக் கொண்டிருக்கும் என்பதனையும் புதிய அரசவையினை உருவாக்குவதற்கான தேர்தல்களைச் சுயாதீனமான வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களும் நடைமுறைகளும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தினால் மக்களுக்கு அறியத் தரப்படுகிற என்பதனையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவை கலைக்கப்பட்டுப் புதிய அரசவை உருவாக்கப்படவுள்ளதொரு சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாகவும்; அதன் செயற்பரிமாணம் தொடர்பாகவும் சில கருத்துக்களை இந்நேரத்தில் மக்களுடன் பகிர்ந்து கொள்ளல் பயன் தரக்கூடியது எனக் கருதுகிறேன்.

2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பினை நடத்தி முடித்துத் தமிழீழ மண்ணை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதுடன் தமிழர் தேசத்தின் விடுதலைக் கனவை முழுமையாகத் தான் துவம்சம் செய்துவிட்டதாகவே சிங்களம் கருதியது.

தமிழீழத் தாயகத்தின் அனைத்துப் பரப்புகளிலும் சிங்கள இராணுவத்தின் அசிங்கமான கால்களைப் பரவச்செய்து சிறிலங்காவின் ஒடுக்குமுறைச் சட்டங்கள் ஊடாகவும், இராணுவ வன்முறைகள் ஊடாகவும் தமிழ் மக்களின் கழுத்தை இறுகத் திருகியவாறு தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் தகர்த்துத் தமிழர் தேசத்தை

அடிமைகொண்டு விடலாம் என்றும் சிங்களம் எண்ணியது.
தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாகவும், இலங்கைத்தீவு ‘ஒருநாடு ஒருமக்கள்’ கொண்டது என்றும் அம்மக்கள் அனைவரும் ‘சிறிலங்கர்களே’ என்றும் கூறி ‘வெற்றிப் பிரகடனம்’ செய்தது.

இத்தகையதொரு சூழலில்தான் சிறிலங்கா சிங்கள தேசத்தின் நாடு என்பதனையும் தமிழீழமே தமிழர் தேசத்தின் நாடு என்பதனையும் தெளிவாக அடையாளப்படுத்தும் வகையிலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தைப் புதிய பரிமாணத்தில் அரசியல் இராஜதந்திர வழிகளில் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பதனை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

தமிழர் தேசத்தின் விடுதலை இலட்சியத்தினை இனஅழிப்பு நடவடிக்கைள் மூலமோ எத்தகைய பெரும் ஒடுக்குமுறைகளின் மூலமோ தகர்த்தெறிய முடியாது என்பதனை முரசறைந்து சொல்லும் வகையில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் முதலாண்டு நினைவு நாட்களின் போது 2010ம் ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னை அங்குரார்ப்பணம் செய்துகொண்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் பல்வேறு எதிர்ப்புக்களின் மத்தியிலேயே நிகழ்ந்தது என்பதுவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையைக் கருவிலேயே கருக்கிவிட முயற்சிகள் பல நடைபெற்றன என்பதுவும் இத் தருணத்தில் நினைவில் வரவே செய்கின்றன.

இருப்பினும் அவற்றையெல்லாம் தாண்டி இக் குழந்தை மூன்று வயதை நிறைவு செய்திருக்கிறது என்பதுவும் தழிழீழ மக்களின் சுதந்திர தாகத்தின் குறியீடாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது என்பதுவும் தமிழர் தேச வரலாற்றில் முக்கியமான பதிவாக அமைகின்றன.
புலம் பெயர் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தழிழீழத் தாயகத்திலும் நமது மக்களின் விடுதலைக் கனவை உயிர்ப்போடு வைத்திருப்பதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணையாக அமைந்திருக்கிறது.

தமிழ் நாடு மற்றும் உலகத் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் தமிழீழ அரசின் உருவாக்கத்தைக் கட்டியம் கூறிநிற்கும் அமைப்பாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று விளங்குகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் உலகுக்கு முன்னுதாரணமாக அமையும் ஒரு நடைமுறையான நாடுகடந்த அரசாங்கத்தினை நாம் நடாத்தியிருக்கிறோம். ஜனநாயக விழுமியங்களுக்கமைய மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு, அவர்களால் வரையப்பட்ட அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் ஒரு அரசாங்கம் இயங்குவதென்ற

செயன்முறையைப் பின்பற்றி நாம் செயற்பட்டு வந்துள்ளோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக இயந்திரமும் தமிழீழ மக்கள் தமது அரசை நிறுவும்போது பயன்படுத்தக்கூடிய சொற்பதங்களைத் தன்னோடு கொண்டிருந்தது. இது தமிழீழ மக்களின் விடுதலைக்கனவின் ஒரு

குறியீடாகவே உட்கொணரப்பட்டது. அரசவை எனவும், பிரதமர் எனவும் அமைச்சர்கள் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விளிப்பது மக்கள் மத்தியில் நிலவும் தனித் தமிழீழ அரசின் உருவாக்கம் பற்றிய பெருவிருப்பினைச் சுட்டிக் காட்டும் வகையிலானதாகவே அமைகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலவாது அரசவைக்காலம் உண்மையில் ஒரு பரீட்சைக்களமாகவே அமைந்தது என்பதனையும் இங்கு குறித்துக் கொள்ளல் பொருத்தமானது.
முன்னர் ஒருபோதும் இயங்கியிருக்காத வகையில் முற்றிலும் புதியதொரு பரிமாணத்திலேயே நாம் இயங்கி வந்துள்ளோம். பல்வேறு விடயங்களையும் நாடுகளின் எல்லைகளைக் கடந்த அளவிலே அரசியல் ரீதியாக,

 வெளிப்படையாக, விவாதித்து ஜனநாயக அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் நடைமுறைக்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டோம்.
இக் காலத்தில் நாம் எதிர்பார்த்த எல்லாவற்றையும் பல்வேறு சவால்கள், காரணங்களால் எம்மால் நிறைவு செய்யமுடியவில்லை. எனினும் தமிழீழ

 இலட்சியத்தை உயிர்ப்பாகப் பேணும் ஓர் அமைப்பாக எம்மை நிலைநிறுத்திக் கொண்டோம். எமது தொடர்சியான செயற்பாடுகளை உலகின் பல்வேறுசக்திகளும் பலமிக்க அரசுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகிறார்கள் என்பதனை நாம் தெளிவாக உணரமுடிகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேலும் விரிவாக்கிச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது.

தாயகத்தில் நமது மக்கள் விடுதலை வேண்டி எழுச்சியாக உள்ளார்கள். அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்களின் பங்குபற்றல், வாக்களிப்பு என்பன அதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. ஆறாவது அரசியல் அமைப்புச் திருத்தச் சட்டத்தினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அரசியல் வெளிக்குள் நின்றுகொண்டு, தமது விடுதலை உணர்வை தம்மாலியன்ற அளவுக்கு எம்முறவுகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதேநேரம் முற்றிலும் திறந்த அரசியல் வெளியில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பானது சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழமே என்பதை அதன் உருவாக்க நாட்களிலிருந்து உரத்துக் கூறிவருகின்றது.
சிறிலங்கா அரசு தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப் போவதில்லை. சிங்கள அரச இயந்திரம் தமிழீழ மக்களை மேலும் அடிமைப்படுத்தவே வழிதேடும்.

இதனால் தமிழீழத் தனியரசைத் தவிர எமது விடுதலைக்கு வேறு வழியேதும் இல்லையென்ற உண்மையை வரலாறு மீண்டும் வலியுறுத்துவதற்கும், சர்வதேச அரங்கில் அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கும் அதிககாலம் எடுக்கப் போவதில்லை. அப்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இன்னும் கூடுதலான அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும்.

தற்போது மூன்று வருடக் குழந்தையாயுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வழிநடாத்தி வளர்த்துச் செல்வதற்குரிய பாதுகாவலர்களைத் தெரிந்தெடுப்பது இக் குழந்தையின் பெற்றோர்களாகிய மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இக் குழந்தையின் உண்மையான பாதுகாவலர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டும், தகுதி கொண்டோரையெல்லாம் வரப்போகும் அரசவைக்கான தேர்தலில் முன்னிறுத்தியும், நடைபெறவுள்ள தேர்தல்களில் பெருந்தொகையாகக் கலந்துகொண்டு மக்களாட்சி மரபுகளை மேலொருபடி உயர்த்தும் வகையில் வாக்களித்தும், தமிழீழ மக்களின் விடுதலைக் கனவை நனவாக்கும் பெரும் பணிக்காகச் செயற்படுமாறு தமிழ் உறவுகள் அனைவரையும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அரசவையின் உறுப்பினர்களாக முன்வந்து பல்வேறு முனைகளில் அருந்தொண்டாற்றிய அனைத்து உடன்பிறப்புகளுக்கும்,  துணைநின்று பல துறைகளில் உதவி வந்த எல்லோருக்கும் இத் தருணத்தில் எனது பணிவும் அன்பும் கலந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு பிரமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைக்கான தேர்தல்! வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 2 முதல் 8 ஆம் திகதி வரை
தமிழ் மக்கள் செறிவாக வாழும் 15 நாடுகளிலிருந்து 112 அங்கத்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை ஒக்டோபர் 01, 2013 அன்று கலைக்கப்பட்டு ஒக்டோபர் 26ம் நாள் புதிய அரசவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் சம்பந்தமான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன.
1. நா.க.த. அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013
2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது  ஒக்டோபர் 02, 2013
3. வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் ஒக்டோபர் 08, 2013
4. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நாள்  ஒக்டோபர் 10, 2013
5. வேட்பாளர் மனு மீளப் பெறும் இறுதி நாள் ஒக்டோபர் 12, 2013
6. நா.க.த. அரசாங்கத்தின் பொதுத் தேர்தல் ஒக்டோபர் 26, 2013

அரசவை கலைக்கப்படுவதற்கும் தேர்தல் மனுத் தாக்கல் செய்வதற்குமான கால இடைவெளி ஒரு வாரம். வேட்பாளராக மனுத் தாக்கல் செய்யவிருக்கும் அன்பர்களைக் கருத்தில் கொண்டு, இரு மாதங்களுக்கு முன்பிருந்தே இத் திகதிகள் ஊடகங்கள் வாயிலாகவும் இணையத் தளங்கள் வாயிலாகவும் அறியத் தரப்பட்டுக் கொண்டிருக்கிறன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தலில் வாக்குரிமை
வாக்காளர், பொதுவாக, அவரவர் வதிவிடத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட ஒரு தொகுதியில் தங்கள் ஒற்றை வாக்குகளைப் பதிவு செய்யும் தகைமை உடையவராவர். இருப்பினும், பல அங்கத்துவத் தேர்தல் தொகுதிகளில் வேறுபாடுகள் காணப்படலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத் தேர்தல்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் எதிர்வரும் தேர்தலில், தேர்தல் தொகுதிகள் தனி அங்கத்தவர் தொகுதியாகவோ அல்லது பல அங்கத்தவர் தொகுதியாகவோ அமையலாம். பொதுவாக, அதிக பட்ச வாக்குகளைப்

பெற்றவரே வெற்றியாளராவார். இருப்பினும், பல அங்கத்தவர் தொகுதிகளில் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும் கிரமங்கள் வேறுபடலாம். நாட்டு நிலைமைக்கேற்ப, உரிய கிரமத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தந்த நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிக பட்ச வாக்குகளின் அடிப்படையிலான வாக்களிப்பு
• தனி அங்கத்துவத் தொகுதி

பெற்றுக் கொண்ட வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில், என்ன நூற்றுவிழுக்காடாக இருந்த போதிலும் அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்கும் முறை.

• பல அங்கத்துவத் தொகுதி
அங்கத்துவ எண்ணிக்கைக்குச் சமனான வாக்குகளைப் பதிவாக்கும் உரிமை தனி வாக்காளருக்கு வழங்கப் படுதல், அல்லது ஒருவருக்கு ஒரே வாக்கு என்ற முறையில் வாக்குகள் பதியப்பட்டு, தனித்தனி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தி அத்தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

வாக்காளர், வேட்பாளர் தகைமைகள் கீழே தரப்படுகின்றன:
வாக்குப் பதிவு முறை- கனடாவில் தேர்தல் நடைபெறும் அனைத்துத் தொகுதிகளிலுமே ஒரு வாக்காளருக்கு ஒரு வேட்பாளர் என்னும் அடிப்படையில் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு வாக்குக்கே உரித்துடையவராவார்.
வாக்காளர் தகுதி

1. தேர்தல் நாளன்று வாக்காளருக்கு 17 வயது பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
2. வாக்குரிமை கோரி வரும் வாக்காளர், தலைமைதாங்கும் அலுவலர்  கணிப்பில் தமிழீழப் பண்பாட்டுடன் இனங்காணப்படல் வேண்டும்.
ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் என்பவற்றாலோ, வேறு ஏதும் எஞ்சிய பிரிவின் அடிப்படையிலோ இணைந்தவராதல் வேண்டும்.

பின்னைய பிரிவு ஓர் எஞ்சிய பிரிவாகக் கருதப்பட்டு தனித் தனியே ஆராயப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தகுதி தீர்மானிக்கப்படும்.
வேட்பாளர்களின் தகுதி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நோக்குடன் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிட முன்வரும் ஒருவர் கீழ்க்காணும் தகமைகளைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
1.   குறிப்பிட்ட தேர்தலில் தான் வாக்களிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன்,

2. வேட்பு மனு தாக்கல் செய்பவர், அந்த நாட்டின் வதிவுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
2.1 அவர், தேர்தலுக்கு நிற்கும் மாவட்டத் தொகுதியில் வதிப்பவராக இருத்தலே அதிசிறந்த நிலையாகும்.

2.2 இருப்பினும், அவர் வதியும் குறிப்பிட்ட மாவட்டத் தேர்தல் தொகுதியில் மட்டுமல்லாமல் அதே தேர்தல் பிராந்தியத்தில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடுவதற்குத் தகுதியுடையவர் ஆகிறார்.

2.3 குறித்த அப் பிராந்தியத்தில் வசிப்பவர் எவரும் வேட்பாளராக முன்வராத நிலையில் அந்நாட்டின் எப் பிராந்தியத்திலாவது வசிப்பவரிடமிருந்தும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் சிறப்புரிமை தேர்தல் ஆணையாளருக்கு உண்டு.

3. வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், நா.க.த.அ தேர்தல் ஆணையத்திலோ, நாட்டுத் தேர்தல் ஆணையத்திலோ பதவி வகிப்பவராகவோ அல்லது நா.க.த. அரசாங்கத்தின் தேர்தல் நிர்வாகத்துடன் எவ்வழியிலேனும் தொடர்புடையவராகவோ இருத்தலாகாது.

வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், இலாபத்துக்காகவோ, இலாப நோக்குடனோ குற்றவியல் தவறு செய்தார் என எந்த நீதிமன்றத்தாலும், தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது போட்டிக்காலத்தில் குற்றப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
4.  வேட்புமனுச் சமர்ப்பிக்கும் எவரும், தமிழ்ஈழ மக்களின் நலன்களுக்கு மாறாகவுள்ள வேற்று நாடுகளில் சேவை ஆற்றுபவராக இருக்கக் கூடாது. அத்தகைய நாட்டிலிருந்து பொருளாதார நன்மை ஏதும் அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

5. வைப்புப் பணம்: பதிவுக்கட்டணமாகத் அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் தொகையை அவர்கள் குறிப்பிடும் முறைப்படி செலுத்தவேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து இனத்தின் விடிவிற்காகச் செயலாற்ற விரும்பும் அன்பர்கள் உங்கள் நாட்டுத் தேர்தல் ஆணையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.

தேர்தல் நேர்மையாகவும், உண்மையாகவும், நன்நோக்குடனும், வெளிப்படையாகவும் நடக்கும் என்பதை உறுதி செய்கிறேன்.
திருமதி. செ. ஸ்ரீதாஸ்  தலைவர், தேர்தல் ஆணையம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

பதிப்பு-3- நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை:

 
என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.
   
அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.
போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி

பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர

சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.
சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இங்கு வன்முறைக்கு இடமில்லை.

வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணசபை

6/10/13

முதலில் நானே13ஆவது திருத்தத்தை பாதுகாக்க


13ஆவது திருத்தத்தை பாதுகாக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் முதன் முதலில் நானே குரல் கொடுத்தேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்குரிய வீடு

அமைப்பதற்காக உபகார கொடுப்பனவை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.
உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் அதன் மட்டக்களப்பு

மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் முரளிதரன்,
13ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுப்பதற்கு முதல் நானே குரல் கொடுத்தேன். 13ஆவது திருத்ததை பாதுகாக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். அதற்கு ஆதரவாகவே நான் பேசினேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காகவே போராடச் சென்றவன் நான். அதில் எனது சகோதரனையும் இழந்தேன். அதேபோன்று நீங்களும் உங்கள் சகோதரர்களையும் பிள்ளைகளையும் இழந்துள்ளீர்கள்.

இன்று வடிவத்தை மாற்றி நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் கல்வி இவைகள் இரண்டும் முக்கியமானதாகும். இவைகள் இன்று அபிவிருத்தியடைந்து வருகின்றன. இன்று நமக்கு எந்த தடைகளும் கிடையாது. சோதனைச் சாவடிகள் மற்றும் கெடுபிடிகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டன.

வட மாகாண சபை தேர்தல் சுதந்திரமாக நடைபெற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்யவுள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். ஜனாதிபதி முன்னிலையில் அவர் முதலமைச்சராக சத்தியப்பிரமானம் செய்வது இந்த நாட்டினுடைய அரசியலமைப்பாகும். தனிப்பட்ட அரசியல் கருத்து அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

5/10/13

இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த..


நாட்டின் இனவாத மழை ஓய்ந்துள்ள இவ்வேளையில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு சில பெளத்த அமைப்பு முயற்சிப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபலசேனா போன்ற பெளத்த

இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் அதிகமாக தலையிட்டு மீண்டுமொரு முறை யுத்த சூழலை ஏற்படுத்த முயல்வதை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
   
எம்.வி. ரஸ்மின் எழுதிய போர்க்கால "சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவநோக்கு" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து இனவாத மழை பெய்து ஓய்ந்திருக்கும் இவ்வேளையில் பொதுபலசேனா, ராவணா பலய போன்ற பெளத்த இனவாத சக்திகள் நாட்டில் மீண்டுமொரு முறை இனவாத தீயினை மூட்டி விடுவதற்கு முயற்சிக்கின்றன.

இவ்வாறு மீண்டுமொரு முறை இந்நாட்டில் யுத்த சூழலை உருவாக்க பெளத்த அமைப்பு முயற்சிக்கின்றமையை எங்களால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையை சிறந்த ஜனநாயக நாடாக கட்டியெழுப்புவதாயின் அனைத்து இனத்தவர்களுக்கும் சமவுரிமை மற்றும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தற்போது நமது நாட்டில் சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இவ்வேளை மேற்படி நாட்டின் சூழ்நிலை காணப்பட்டால் இலங்கையை கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

தமிழர் முஸ்லிம்கள் எப்படிப்பட்ட பண்பைக் கொண்டவர்கள் என்பதை அவர்களுடைய இலக்கியங்கள் மூலமாக சிங்களவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்நாடு இன ரீதியாக பிளவுபடுவதற்கு வாய்ப்புள்ளது.

இவையனைத்தையும் புரிந்துணர்வுடன் தீர்த்து ஒருமைப்பாட்டுடன் கூடிய ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும். அதற்கான எடுத்து காட்டே ரஸ்மின் எழுதிய ��போர்க்கால சிங்கள இலக்கியங்கள்" என்ற நூலாகும்.

ரஸிமினின் நூலை சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. எனவே இலங்கையை இனவாத சக்திகளிடமிருந்து மீட்டு சமத்துவம், சமாதானம் நிறைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்
 

4/10/13

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை ஜனாதிபதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தால் நாட்டில் தலைதூக்கியுள்ள போதை பொருள் பாவனையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என இலங்கை போதைபொருள் ஒழிப்புக்கான இளையோர் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பாவனையால் நாட்டில் ஊழல், மோசடி வரையரையின்றி அதிகரித்துச் செல்வதாக கொழும்பில் இன்று (03)

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார். 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்த சிந்தனை ஊடாக மத்தட்ட தித்த என்ற மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது சரியான வகையில் செயற்படுத்தப்படவில்லை என சோபித்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
   
அதனால் தமது அமைப்பு முன்வைக்கும் இரண்டு யோசனைகளை உடன் செயற்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தலதா மாளிகையை அண்டியுள்ள 9 மதுபானசாலைகளை மூட வேண்டும். புகைத்தல் பொருள் பெட்டிகளில் சுகாதார எச்சரிக்கை விளம்பரத்தை கட்டாயப்படுத்தல் போன்ற யோசனைகளை முன்வைப்பதாக அவர் கூறினார். 

3/10/13

மேயரின் நண்பர் போதைப் பொருள் வழக்கில் கைது


கனடாவின் றொரண்ரோ நகர மேயரின் நண்பர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் றொரண்ரோவில் உள்ள Etobicoke என்ற இடத்திலுள்ள உலர் சலவை கடை ஒன்றில் பொலிசார் நடத்திய திடீர் சோதனையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அலெக்ஸாண்டர் லிசி(வயது 35) என்பவர், றொரண்ரோ மேயரின் நண்பரும், சாரதியும் ஆவார் என தெரியவந்துள்ளது.

மேலும் Marijuna என்ற போதைப் பொருளை வைத்திருந்தது, கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொருவரான Jamshid Bahrami(வயது 47) என்பவர் கொகைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்தது, மூன்று தடவைகள் Marijuna என்ற பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அலெக்ஸாண்டருக்கு 5000 டொலர் அபராதமாக விதித்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2/10/13

நவிபிள்ளையின் வாய்மூல அறிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ஆம் திகதி, ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும், கருத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24ஆவது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது-
“ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் நீதித்துறையில் தலையீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த உயர்ஆணையரின் கவலைகளில், அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.
போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள

முன்னேற்றம் காணப்படாவிட்டால், அனைத்துலக விசாரணை அழைப்புகள் தொடரும் என்ற, ஐ.நா உயர் ஆணையரின் மதிப்பீட்டை அமெரிக்காவும் சுட்டிக்காட்டுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.