ஆற்றங்கரை மணலில்
நான் கிறுக்கிய கோடுகள்
உன் பெயரை உரைத்து
சிரித்து மகிழ்ந்தன
என் உதடுகளுக்குள் அல்லாமல்
அடி மனசில் உன் நாமம்
பதிந்து கிடந்தது
இந்த அந்நிய வாழ்வின்
பொழுதொன்றில் தான்
நான் உன்னை உணர்ந்தேன்
தெரியா வதனமாய் தான்
என் மனமென்னும் விளை
நிலத்தில் நீ நாடா கத்தரித்தாய்
எழுதுகோல் கொண்டு
உருவகித்த எழுத்துக்களால்
உன் எண்ணங்களில் நான்
மஞ்சமிட்டுக் கொண்டேன்
என்ற பஞ்சான
உன் நினைவுகளை
என் மீது நீ உதிர்த்த போது
என் மனம் கைப்பற்றி கொண்டது
உன் உள உணர்வுகளை
வாதிட்டாய் கருத்திட்டாய்
மேம்படவே என் உயிர் வரிகள்
வார்த்தை தந்து
என்னை செதுக்கினாய்
கைகள் வீசி நடந்த போது
எழுந்த சந்தம் உந்தன்
கதைகள் கூறி சென்றது
சப்த நாடிகளும் அடங்க
பல சண்டைகளில் என்னை
வார்த்தைகளால் வசீகரிப்பாய்
ஆனால் வஞ்சிப்பாய்
மனம் உடைந்து நீ ஏற்றிய
தீப ஒளி காற்றில் நிமிர்ந்து
நிற்க முடியாது
கலி எனும் இருளுக்குள்
மூழ்க ஆரம்பிக்கும் ஆனால்
பொழுது வினாடியாய்
கடக்க முன்னே
“கவி”என்ற ஒரு சொல்
புயலை நிர்மூலம் செய்யும்
ஒளியை நிமிர வைக்கும்
நட்பெனும் ஆயுதத்தால்
என்னை ஆளுகை செய்வாய்
மீண்டும் சந்தோச அலை
என் நரம்பு மண்டலத்தில்
நர்த்தனம் புரியும்
இப்போது என் உயிர்
உன் வாசணையை தேடுகிறது
கரை கடந்து ஓடும்
விழி நீரில் பூத்த அல்லியானாய்
விழிகள் சாக துடிக்கின்றன
நீ கூறிய “பிரிவு” என்ற
விஷ வார்த்தைகளை
உட் கொண்டதால்…
ஆக்கம் கவிமகன்.இ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக