siruppiddy

1/12/13

இலங்கையின் இனப்படுகொலைக்கு ராஜபக்ஷவுக்கு 100 வீத பொறுப்பு – மன்மோகனுக்கு 50 வீத பொறுப்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அப்போது இலங்கை அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பாரதீய ஜனதா கட்சியே  காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் பஞ்சாயத்தில் கிராம யாத்திரையை தொடங்கி வைத்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

அதன் போது, பாரதீய ஜனதா மீது ப.சிதம்பரம் திடீரென்று குற்றம் சுமத்தி உள்ளார். இது காலம் கடந்து ஏற்பட்ட ஞானோதயம்.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கினால் அது எப்படி  இந்தியாவுக்கு எதிராக திரும்புமோ அதேபோல் இலங்கை அரசுக்கு கொடுக்கும் ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாயும் என்பதை பா.ஜனதா உணர்ந்து இருந்தது.
எனவேதான் இலங்கை அரசு ஆயுதம் கேட்டபோது கொடுக்க மறுத்ததோடு இலங்கை வீரர்களின் ஆயுத பயிற்சிக்கும் தார்மீக ஆதரவு கொடுக்க மறுத்தவர் வாஜ்பாய் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு வெறும் நாடகம். இதனால் பயன்பெற போவது ராஜபக்ஷ. இன்னல்களுக்கு ஆளாகப்போவது தமிழர்கள் என்பதால் காமன்வெல்த் மாநாட்டை பா.ஜனதா எதிர்த்தது.

இங்கிலாந்து பிரதமர் கெமரூனின் அடிப்படை தைரியம் கூட மன்மோகன் சிங்குக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இனியும் இந்த பிரச்சினையில் காங்கிரஸ் போடும் நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ராஜபக்ஷ 100 சதவீத பொறுப்பு என்றால் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 50 சதவீத தார்மீக பொறுப்பு உண்டு.
 
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ப.சிதம்பரத்துக்கும் தார்மீக பொறுப்பு உண்டு என்பதை அவர் உணரவேண்டும். காலம் கடந்து உண்மைகளை மறைக்க குற்றம் சுமத்துவதை தவிர்க்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.
 
 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக