siruppiddy

11/4/14

பாரம்பரிய காணிகளை தமிழ் முஸ்லிம் உரிமையாளர்களுக்கு **

 யுத்தம் ஓய்ந்து, அமைதி நிலவும் சூழ்நிலையில் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு, தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட பெருமுறிப்பு சவாரத்துவெளி, காதர் மீரான்குளம், தண்ணிமுறிப்பு குடியேற்றக் காணிகளை மீண்டும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணிமுறிப்பு பெருநீர்ப்பாய்ச்சல் குளத்தின் கீழ் இருந்த விவசாயிகள் 12 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள முள்ளிவளை, தண்ணீர் ஊற்று, முல்லைத்தீவு, அலம்பில், செம்மலை ஆகிய இடங்களில் வசித்து வந்ததால் அப்போதைய அரசு இந்த வறிய விவசாயிகளின் போக்குவரத்துச் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்கள் குடியிருப்பதற்காக ஓர் ஏக்கர் வீதம் குடிநிலக் காணிகளை 1974 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.

இது தண்ணிமுறிப்பு குளத்துடன், பெருமுறிப்பு சவாரத்து வெளி, கலிங்கு வெட்டை, காதர் மீரான்குளம் ஆகிய விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகளுக்கான தண்ணிமுறிப்பு குடியேற்றம் ஆகும்.

பின் சில காரணங்களால் சுமார் 33 வருடங்களின் பின்னர் இத் தண்ணிமுறிப்பு மீள்குடியேற்ற கிராமம் முற்றாகக் கைவிடப்பட்டிருந்த நிலையில் பற்றைக் காடுகளாக மாறியிருந்தது.

இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ரஹீம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, பாரம்பரிய காணி உரிமையாளர்களுக்கு அக் காணிகளை துப்புரவு செய்து அங்கு வீடுகளை அமைத்து, குடியேறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இதனை அமைச்சர் ஹக்கீம், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிரி, வட மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக