siruppiddy

14/10/14

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகின்றார்!மஹிந்த ..

நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுவதற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்குக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தானும் இந்த நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகிறார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும். அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் பலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் கருதுகின்றார்.
உண்மையிலேயே ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. இது வெறுமனே சிங்கள மக்களை திசைதிருப்புவதற்காக மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்போடும் ஜனாதிபதியின் முயற்சியாகும். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் அர்த்தமற்றவையெனவும் அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக