siruppiddy

25/10/14

வட மாகாண சபையில் நிறைவேற்றத் தடையேதும் இல்லை: தமிழ் அமைப்பு

 இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும், நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருந்தது.
இந்த நிலையிலேயே கல்விமான்கள், சட்டத்தரணிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழ் சிவில் சமூக அமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சிவில் சமூகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில்..
( இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ – சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.
இனப்படுகொலை தொடர்பில் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்துக்கள் வருமாறு:-
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, தொடர்ந்தும் நடத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.
தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது.
1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948 ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது.
இச்சமவாயமானது இனப்படுகொலை என்பதை ஒரு தேசிய இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது (இனப்படுகொலை சமவாயத்தின் 2 ஆம் உறுப்புரை).
மேலும் இனப்படுகொலையானது மரபு சார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்படமுடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது.
2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7) ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது.
தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும்.
போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவைக் கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு.
இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். மேலும் இனப்படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது.
மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது ‘இனப்படுகொலை’ என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐ.நா. விசாரணைக் குழுவானது இனப்படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்க மாட்டாது.
3) தம்மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப்படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள்.
அவ்வாறான சட்ட ரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு.
நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகளற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று.
அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள்.
இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன.
அண்மைக்காலமாக சர்வதேச சட்டததில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டிலும் (Responsibility to Protect) இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காது.
எனவே, தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது.
4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு. அவற்றுள் சில:
அ) வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இரு தரப்புக்களாலும்மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன.
5. தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளி வாக முன்வைக்க வேண்டும்.
தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்கு கொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது.
எனவே,
அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும்.
ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும்.
இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம் என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக