siruppiddy

14/6/13

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ,


13 ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான  தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ,
இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ அமையமுடியாது.
வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபை முறைமை தொடர்பாகவும் எமது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்துகின்றோம். சர்வதேச மற்றும் உள்ளுர் அரசியல் நகர்வுகளை விளங்கிக் கொள்வதன் ஊடாக இம்மாகாண சபை என்கின்ற பொறியை தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், அப்புரிதலின் ஊடாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறுபவர்கள், எதிர்காலத்தில் எடுக்கக் கூடிய வரலாற்றுத் தவறான முடிவுகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்ற நோக்கிலும் இந்த ஊடக அறிக்கை வெளியிடுகின்றோம்.
எமது கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய மிகவும் முக்கியமான மூன்று  சம்பவங்கள் உள்ளன. ஒன்று 2009 மே 18 இல் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து மூன்று நாட்களில் இடம்பெற்றது.  இந்தியாவின் முக்கிய பிரமுகர்களான அன்றய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர்மேனன், மற்றும் அப்போதய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்று இலங்கை வந்திருந்தது.  அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையும் அப்போது சந்தித்திருந்தனர். அந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்  தற்போதய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இந்தியத் தரப்பினால் அந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டவற்றினுள் மிகப் பிரதானமானது தமிழ் மக்கள் 13ம் திருத்தச் சட்டத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனபதாகும். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் 13ம் திருத்தம் சம்மந்தமாக விமர்சனங்களை முன்வைத்து அந்த தீர்வுத்திட்டம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என கூறியபோது நாராயணன் அவர்கள் கோபித்து பதிலளித்திருந்தார். தமிழருக்கு எத்தகைய தீர்வு நல்லதென்பது தமிழ் மக்களை விடவும் இந்தியாவுக்கு நன்கு தெரியும் எனக்கூறி 13 ஆம் திருத்தச் சட்டத்தை  ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இது எங்கள் இனத்தின் அரசியல் சரித்திரத்தில் முக்கியமானவிடயம். அந்த சந்திப்பின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டில் பாரிய அடிப்படை மாற்றங்கள் பல ஏற்பட்டிருக்கின்றது. அந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? பின்னணி என்ன? என்பதை பதிவுசெய்யும் நோக்குடனும் தமிழ் மக்கள் சர்வதேச அரசியலை சரியாக அறிந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் எமது மக்ளுக்கு இவ்விடயங்களை பகிரங்கமாக கூற முன்வந்துள்ளோம்.
அடுத்த சம்பவம் கடந்த 2011 ஆகஸ்ட மாதம் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் அவர்களது ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் புதுடில்லியில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அம்மாநாட்டில் எமது கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எட்டுக் கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. அம்மநாட்டை ஏற்பாடு செய்த சுதர்சனநாச்சியப்பன் அவர்கள் 13ம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றய சம்பவமானது 2008ம் ஆண்டு ஒக்ரோபர் முற்பகுதியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் திரு சம்பந்தன் அவர்களிடம் பாராளுமன்றக் கட்டிடத்தில் வைத்து அப்போதய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது எமது கட்சியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் அவசரமான கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதாவது தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என்பதனை நீங்கள் பகிரங்கமாக சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவேண்டும். இன்று யுத்தத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவு வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தாலும் கூட தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒருபோதும் மாற்றங்கள் ஏற்பாடாது என்பதனை சர்வதேச சமூகத்திற்கு ஆணித்தரமாகக் நீங்கள் கூறினால் மட்டுமே சர்வதேசம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும். ஏனெனில் நீங்கள் தமிழ் மக்களால் ஐனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றக் குழுவின் தலைவர். அவ்வகையில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவேண்டும் என்பதனை தாங்கள் பகிரங்கமாக சர்வதேசத்திற்கு அறிவிக்கவேண்டுமெனவும் மிகவும் விநயமாகக் கோரியிருந்தார்.
அப்போது கஜேந்திரனிடம், சம்பந்தன்  அவர்கள் 'இவ்விடயம்; தொடர்பாக தான் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். ஒஸ்லோ அடிப்படையில் ஒரு சமஸ்டி தீர்வுக்கு புலிகள் இணங்கினால் அந்த தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கூடாக முன்வைக்க இணங்கினால், போரை நிறுத்தி வடகிழக்கு இணைத்து தீர்வினை வழங்கலாமென இந்தியா தமக்கு கூறியிருக்கின்றது. ஆனால் பிரபாகரன் தனக்கு பதில் தரவில்லை' என்றும் கூறியிருந்தார். கடந்த மே 11, 2013 அன்று மன்னார் ஞானோதயம் இல்லத்தில் தமிழ்சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில்  இவ்விடயம் மீளவும் திரு.சம்பந்தன் அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.
இம் மூன்று சம்பவங்களும் முக்கியமானவை. இன்று தமிழ் அரசியல் பரப்பில் நிலவும் பல குழப்பங்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ளவேண்டுமாயின் இவற்றை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்று திரு.சம்மந்தன் கூறிய சமஸ்டித் தீர்வுக்கு புலிகள் இணங்கினால் இனப்படுகொலையை நிறுத்தி இணைந்த வடகிழக்கில் இந்தியா தீர்வினைப்பெற்றுத்தருமென சம்மந்தன் வாக்குறுதி கொடுத்திருந்தார். தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்துவதற்கான நிபந்தனையாக மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை இந்தியா மட்டுமல்லாமல் மேற்குலக நாடுகளும் வலியுறுத்தியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் சமஸ்டித் தீர்வுக்கு இடைஞ்சலாக இருக்கின்றார்கள் என்பதனையும் ஓர் சாட்டாகக் கூறியே அவர்களை படத்திலிருந்து அகற்றினர். 
ஆனால் யுத்தம் முடிவடைந்து மூன்று நாட்களுக்குள் இலங்கை வந்த இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில் திரு.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்தித்தபோது சமஸ்ட்டித் தீர்வை நிராகரித்தது மட்டுமன்றி ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென கூறியிருந்தனர். தமிழர்கள் இரு தசாப்தங்களாக பயனற்றது என்று கூறி நிராகரித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை. மாறாக திரு. சம்பந்தன் அவர்களும் அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே தமிழ் மக்களது ஐனநாயக ரீதியான தலைமையாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தலைமையை இந்தியாவும், சர்வதேச சமூகமும் ஏற்று அங்கீகரித்தும் உள்ளது. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக அவர்கள் சமஸ்டித்தீர்வை ஏற்றுக் கொள்கின்றார்களில்லை என்று இந்தியாவும் சர்வதேச சமூகமும் கூறின. ஆனால் இன்று திரு.சந்பந்தன் அவர்களிடம் கூட சமஸ்டித் தீர்வு ஒன்றினை வழங்குவதற்கான முயற்சிகள் எதனையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல 13 ம் திருத்தத்தினை ஏற்க வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன. சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல் புரிந்திருந்தும் தமிழ் மக்களின் நலன்களை அடைவதற்காக இந்தியாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் பேரம்பேச வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சக்திகளின் பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களை இழுத்துச் செல்லும் முகமாக 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஓரு அங்கீகாரம் கொடுத்துவருகின்றது.
1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ம் திகதி 13வது திருத்தச் சட்டம் முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியப் பிரதமர் ராஐPவ்காந்திக்கு அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம், உபதலைவர் திரு.சம்பந்தன் ஆகியோர் கையொப்பமிட்டு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் 13வது திருத்தம் தொடர்பாகவும், மாகாணசபைகள் தொடர்பாகவும் எங்கள் ஏமாற்றத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என கூறப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, தீர்ப்பதாகவோ இழப்புக்களுக்கு ஈடாகவோ அமையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் இந்தச் சட்டங்கள் திருப்பதியளிப்பதாகவும், நீதியானதாகவும், நிலைத்திருக்கக்கூடிய விடயமாகவும் உள்ளது என்று கூறி எமது மக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்ட முடியாது என்றும் அந் நீண்ட கடிதத்தில் தமிழ் விடுதலைக் கூட்டணி கவலையுடன் குறிப்பிட்டிருந்தது. அக்கடிதத்தில் மேலும் '13 ஆம் திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, அதனை அமுல்ப்படுத்தினால் காணிப்பிரச்சனைகளை தீர்க்கலாம் என்கிறார்கள், ஆனால் இணைந்த வடக்கு கிழக்கில் அரச காணிகள் தொடர்பாக ஒருவித அதிகாரமும் இல்லாத வகையில் இந்தச் சட்ட மூலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரச காணிகள் தொடர்பில் மத்திய அரசாங்கமே மேலாதிக்கத்தை கொண்டிருக்கின்றது' என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் இறுதியாக 13வது திருத்தச்சட்டத்தினதும், மாகாணசபைகள் சட்டத்தினதும் உத்தேச சட்ட வரைபுகளை முன்கொண்டு சென்று சட்டமாக மாற்ற வேண்டாமென்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை கேட்கும்படி ஓர் கோரிக்கையினையும் விடுத்திருந்தனர்.
இன்று இந்த நிலை தலைகீழாக மாறி மாகாணசபைகளை ஆரம்ப புள்ளியாக கருதலாம் என்றும், கடவுள் கொடுத்த அரிய சந்தர்ப்பம் என்றும் கூறுமளவுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், அதிலுள்ளவர்களும் மாறியுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இந்த 13ம் திருத்தம் தமிழர் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ இருக்க முடியாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கின்றோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
13ம் திருத்தம் ஒரு முன்மொழிவாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் உயர்நீதிமன்றிற்கு அரசால் அனுப்பப்பட்டு அன்றிருந்த அரசியலமைப்பிற்கு முரணாக இருக்கின்றதா என்பதை அறிவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றிலிருந்த ஒன்பது நீதியரசர்களும் அதனைப் படித்து கருத்துக்களை முன்வைத்தார்கள், ஆரம்பத்தில் ஜந்து நீதியரசர்கள் 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பு அதாவது ஒற்றையாட்சியை மீறியுள்ளது என கூறி அதனை அமுல்ப்படுத்த பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், சர்வஜனவாக்கெடுப்பும் நடத்தவேண்டும் எனகூறியிருந்தனர்.
ஒற்றையாட்சியை மீறுவதாக கூறிய ஜந்து நீதியரசர்களில் ஒருவர் சில மாற்றங்களை செய்தால் இது ஒற்றையாட்சியை மீறாது எனக் கூறினார். அதன் பின்னர் அத்தகய மாற்றங்களுடன் 13 ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்சத்தை பார்த்தால் 13ம் திருத்தம் என்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் எல்லை என்றும், அதனால் 13ம் திருத்தத்திற்கு மேலும் அதிகாரங்களை சேர்த்தால் ஒற்றையாட்சி முறையினை மீறும் என்றும், அதனை மீறினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என கூறியிருந்தனர்.
13ம் திருத்தத்தை அப்போது ஈபிஆர்எல்எவ் தவிர்ந்த தமிழ்த் தரப்புக்கள் அனைத்தும் நிராகரித்து புறக்கணித்திருந்தார்கள். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு மட்டும் திருத்தம் தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்து இணைந்த வடகிழக்கில் போட்டியிட்டு வென்று முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் தெரிவானார். பின்னர் மாகாணசபையில் எந்த அதிhகாரங்களும் இல்லை என்று கூறி தமிழீழ பிரகடனம் செய்து இந்தியாவிற்குத் தப்பிச்சென்றார். எனவே 13ம் திருத்தச் சட்டம் அந்தச் சம்பவத்தின் பின்னர் பேசாப்பொருளாகவே மாறிவிட்டது. இதன் பின்னர் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி 13ம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்திலும், வெளியிலும் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் அது இறந்துபோன ஒரு விடயம் என்றும் அதனைப் பற்றிப்பேசவோ தொட்டுப்பார்க்கவோ நாம் தயாரில்லை எனவும் கூறி நிராகரித்திருந்தார். 
ஆனால் இன்று அந்த கருத்துக்கள் எல்லாம் தலைகீழாக மாறி ஆரம்ப புள்ளியாகவோ, இறுதி தீர்வினை அடை வதற்கான பாதை என்ற போலியான நம்பிக்கையினை ஊட்ட முயற்சி செய்கின்றனர். எங்கள் மக்களிடம் நாங்கள் கூற விரும்புவது சிங்கள தேசத்தில் தமிழருக்கு எதிரான இனவாதம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது, சமஸ்டி குறித்துப் பேசிய ஜ.தே.கட்சி கூட அண்மையில் முன்வைத்த அரசியலமைப்பில் ஒற்றையாட்சியினையே புதிய அரசியலமைப்பு யோசனையாக முன்வைத்துள்ளது.

சிங்கள தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதம் உச்சக்கட்டத்தில் உள்ளது. அந்த இனவாதம் தமிழ் மக்களுக்கென பெயரளவில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் நீக்கப்படவேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் நீக்கப்;படவேண்டும் என கூறிவருகின்றன. இதனால் தமிழ் மக்களும் இந்த 13 ஆம் திருத்தத்தில் ஏதோ இருக்கின்றது என நினைப்பது ஆபத்தானது. எதிர்த்தரப்புக்கள் கூறும் கருத்துக்களுக்கு எதிர்வினையாக எங்கள் இருப்புக்கான முடிவுகளை எடுக்க முடியாது.
இவ்விடயத்தில் தமிழ் புத்திஜீவிகளுக்கும், ஊடகங்களுக்கும் பாரிய கடமையுள்ளது. 13ம் திருத்தத்தின் ஆபத்துக்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி, இன்றுள்ள பூகோள அரசியல் நிலைமைகளையும் அதில் தமிழ் மக்களுக்குள்ள வாய்ப்புக்களையும், தமிழ் மக்களது அரசியல் பலங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவதனூடாக மக்களை அரசியல் மயப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் தலைமை தவறாக முடிவுகளை எடுப்பதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இதன் மூலம் இன்று பூகோள அரசியல் மாற்றத்தினூடாக எமக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்பான சூழ்நிலையை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்      செல்வராசா கஜேந்திரன்
தலைவர்                            பொதுச் செயலாளர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக