siruppiddy

20/7/13

நாடு அமைப்பதற்கல்ல, இழந்த தேசத்தை மீளப்பெறவே இந்தப் போராட்டம்!


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் இழக்கக்கூடாத அனைத்தையுமே இழந்துவிட்டனர். தாங்கள் இனியும் என்ன செய்வது என்ற நிலையில் தமிழ் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் காவலர்களும் மீட்பர்களும் எப்போது வரப்போகிறார்கள் என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற அவிப்பொருளை மகிந்த ராஜபக்ச தற்போது தமிழ் மக்களுக்கு பரிசளிப்பதாக தெரிவித்திருக்கின்றார். இந்த தேர்தல் நடைபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றும் மகிந்த கூறியிருக்கின்றார்.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்பட்டு நிவர்த்திக்கப்படவில்லை. ஒரு பிரச்சினை தோற்றம் பெறுவதற்கு ஒன்றோ பலவோ காரணங்கள் இருக்கலாம். அந்தப் பிரச்சினைக்கு ஒன்றோ பலவோ தீர்வுகளும் இருக்கலாம். அதனால் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கப்பட வேண்டியது முக்கியமானதாகவிருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளும் அவ்வாறுதான். பிரித்தானியர்களிடம் காலனித்துவ நாடாக இருந்த இலங்கைத் தீவு அந்தக் காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே தமிழ் மக்களின் பிரச்சினை தோற்றம் பெற்றுவிட்டது. அதாவது, பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து சிறீலங்காவுடன் சேர்ந்தே விடுதலை பெற்ற தமிழர் தாயகப் பிரதேசங்களை சிறீலங்கா உடனடியாகவே தனது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டது. அந்தக் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக, தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் ஐரோப்பியரின் காலனித்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போது தமிழர் தாயகத்தில் இரண்டு அரசாங்கங்கள் இயங்கிக்கொண்டிருந்தன. வன்னி அரசு, யாழ்ப்பாண அரசு என்று இருந்த அரசாங்கங்களை தமிழர்கள் பரிபாலித்திருக்கின்றனர். அன்றைய காலத்தில் தமிழ் மன்னர்களுக்கு சிங்களவர்கள் திறை செலுத்தி வாழ்ந்திருக்கின்றனர்.
யாழ்பாணத்திலும் வன்னியிலும் பல சிற்றரசர்கள் அரசாண்டனர். அவர்கள் யாருக்கும் அடிபணியவில்லை. வன்னியை ஆண்ட கடைசி மன்னனாகவும் சிறந்த மன்னாகவும் பண்டாரவன்னியனும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனாகவும் சிறந்த மன்னனாகவும் சங்கிலியனும் வரலாற்றுப் பதிவாகியிருக்கின்றனர். போர்த்துக்கீசர் 1505ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வருகை தந்து தமிழர் தாயகப் பிரதேசங்களின் வடபகுதிக் கரையோரங்களைக் கைப்பற்ற முனைந்தபோது வன்னி மற்றும் யாழ்ப்பாண சிற்றரசர்களின் கடுமையான எதிர்த் தாக்குதல்களைச் சந்திக்க நேர்ந்தது.
போர்த்துக்கீசருடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மன்னர்களும் அவர்களின் படைகளும் கடும் சண்டையிட்டு தமது வீரத்தை அன்றே வெளிப்படுத்தியிருக்கின்றனர். சிறீலங்கா அரசாங்கம் பிரச்சாரப்படுத்துவது போன்று தலைவர் பிரபாகரன்தான் ஈழப் போராட்டத்தை தொடங்கி தமிழ் மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளியவரல்ல. காலத்திற்கு காலம் தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
கடந்த காலங்களில் தமிழர் தாயகத்தை ஆண்ட மன்னர்களிடம் இருந்த வீரத்தின் அடுத்த தலைமுறையாகவே பிரபாகரனும் அவரது போராளிகளும் தோற்றம் பெற்றனர். இந்தப் போராட்டம் காலத்திற்கேற்ப ஆயுதப் போராட்டமாக மாறியது. அன்று தமிழர் தாயகத்தில் தமிழ் மன்னர்கள் போராட்டம் நடத்தியதற்கும் இன்று பிரபாகரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றமைக்கும் காரணம் ஒன்றுதான். அதுதான் தமிழ் மக்களின் உரிமைகள். உரிமைகள் மறுக்கப்படுகின்ற எந்தவொரு இனமும் பொங்கியெழுவது தவிர்க்க முடியாதது.
அடக்கியொடுக்கப்படுகின்ற எந்தவொரு இனத்திடமிருந்தும் போர்க்குணம் வெளிப்படுவதை யாராலும் தவிர்க்க முடியாது. ஐந்தறிவு ஜீவன்களான நாய், பூனை, பாம்பு, ஆடு, மாடு, மற்றும் பறவைகள் போன்ற அனைத்துப் பிராணிகளும், ஊர்வனவும் தாங்கள் தாங்களாகவே இருக்கும்.
ஆனால் அவைகளின் இருப்பிடங்களைச் சேதப்படுத்தவோ, அவைகளுக்கு தீங்கு செய்யவோ முற்பட்டால் திருப்பித் தாக்கும். அதேபோன்று தானே தமிழர்களும் போராடினார்கள். தமிழீழக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறியதைப் போன்று ‘இடிக்க வந்தது மாடு அடித்தோம். அடித்தது குற்றமா?’ மாட்டுக்கு அடித்தது குற்றம் என்று கூறுபவர்கள் மாட்டை அவிழ்து வீதியில் விட்டிருக்க கூடாதே? தேசியத் தலைவர் அடிக்கடி கூறுவார். ‘நாங்கள் போராட்ட விரும்பிகள் அல்ல. போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. நாங்கள் அதை எதிர்கொண்டோம்.’ குட்டக் குட்டக் குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பதைப் போன்று சிங்களவன் எங்கள் மீது ஏறிச் சவாரி செய்தான். ஏற்றுக்கொண்டோம். அவனைச் சுமந்தோம். ஆனால், அவன் தான் சவாரி செய்தது போதாதென்று தனது உடமைகள் அனைத்தையும் எங்கள் மீது ஏற்றிக்கொண்டு சவாரி செய்ய முற்பட்டான். நாங்கள் அதை எதிர்த்தோம். அவன் எங்களைத் தாக்கத் தொடங்கினான். நாங்கள் தற்காப்புக்காக தாக்கினோம். இது பிழையா?
சிங்களவன் தமிழனைத் தாக்கலாம். அது ஜனநாயகம். தமிழன் திருப்பித் தாக்கினால் அது பயங்கரவாதம். இது என்ன நீதி? எங்கே இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஐ.நா சபையையும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எங்கே இந்தப் பாடத்திட்டத்தை தயாரித்தன.
ஒரு அரசாங்கம் தனது நாட்டு மக்களை எப்படியும் வதைக்கலாம். தாக்கலாம். அடித்துக் கொல்லாம். தேவையேற்பட்டால் உடலை மறைத்தும் வைக்கலாம். மனிதர்களைக் காணாமல் போகச் செய்யலாம். ஆனால், குடிமக்கள் திருப்பி எதுவும் செய்யக்கூடாது. பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது தான் ஐ.நா.வினதும் அமெரிக்
காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் மனித உரிமைச் சட்டங்கள். பசுவைக் கொல்வது பாவம் என்று இந்து மதம் சொல்கின்றது. ஆனால், அதே இந்து மதத்தை ஒட்டியெழுந்த மனுநீதியில், கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இது தான் முறையான சட்டம். இதுதான் முறையான நீதி. உயிர்க்கொலை, தவறுகள், பழி, பாவங்கள் செய்யக்கூடாது தான். ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் அந்த நாட்டினுடைய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த நாட்டின் ஆதிக்கம் மிக்க சக்திகளால் குறித்த ஒரு பகுதி மக்கள் மீது கொலை முயற்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?
தமிழர்கள் இதைத்தான் செய்தார்கள். அடித்தவனைத் திருப்பி அடித்தார்கள். இதைத்தானே அநியாயம் என்கிறீர்கள். இதைத்தானே அராஜகம் என்கிறீர்கள். இதுதானே உங்கள் அர்த்தத்தில் பயங்கரவாதம். தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து இதனை அழிக்க சிறீலங்காவிற்கு உதவிய மேற்குலகமே, எமது போராட்டத்தை அழித்த பின்னராவது எமது உரிமைகள் பற்றி ஆராய்ந்தீர்களா? ஏன் போராட்டம் தோற்றம் பெற்றது என்று உருப்படியான ஆய்வு ஒன்றைச் செய்து எமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர முயன்றீர்களா?
தமிழர்களை கொத்துக்கொத்தாக அழிப்பதற்கு இரசாயன ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தீர்கள். சிறீலங்காப் படைகள் இன்று தமிழர் தாயகத்தை சுடுகாடாக மாற்றியிருக்கின்றனர். எமது அழிவுக்கு யார் பதில் சொல்வது? போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற கோசத்துடன் சிங்கள அரசாங்கங்கள் எங்களை அழிக்க வந்தபோது சர்வதேசம் தடுத்திருந்தால் இன்று எங்கள் சொந்தங்கள், உற்றார், உறவினர்கள் எங்களோடே இருந்திருப்பார்கள்.

ஆனால், எல்லாம் நடக்கும் வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இன்று நாங்கள் புரிந்தது தான் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியிருக்கின்றீர்கள். சர்வதேச நாடுகளே, நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக்கோடுகள் உள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாங்கள் அடைந்துவிட்டோம். விடுதலைப் போராட்டம் என்றால் எப்படியானது என்று உலகுக்கு வரைவிலக்கணம் கொடுத்த எங்கள் நியாயமான, நீதியான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று அழித்தீர்கள். இனியாவது, விரைந்து செயற்பட்டு எமது இழப்புகளுக்கு நிகரான தீர்வைப் பெற்றுத்தாருங்கள். இல்லாவிடில், உங்கள் பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்காக இன்னும் இன்னும் தமிழர்கள் இனப்பலியாகிக் கொண்டிருப்பது தவிர்க்கமுயடியாததாகவே .இருக்கும்     
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக