siruppiddy

25/7/13

தாரைவார்த்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க அரசு??


 
 கச்சதீவை விட்டுகொடுப்பதன் மூலம் அது தொடர்பான ஒப்பந்தத்தை இல்லாது ஒழித்து அதை அடிப்படையாக கொண்டு 1987ன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு 13ம் திருத்தத்தை அடியோடு அழித்தொழிக்க அரசுக்குள் சதியாலோசனை நடைபெறுகிறது.
ஆனால் இன்று 13ம் திருத்தம் என்பது இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு அங்கம். அது தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்துக்கு அரசாங்கம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்துள்ளது.ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தங்களை கிழித்தாலும் ஒழித்தாலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்வது என்பது இன்று இந்தியாவையும் தாண்டிய சர்வதேச பிரச்சினையாகி விட்டது என்பதை நான் அரசுக்கு உறுதியுடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது கச்சதீவு தொடர்பாக இன்று இந்திய உயர் நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை படைகளின் தொல்லையில் இருந்து மீட்பதற்கு ஒரே வழிஇ கச்சதீவை மீட்பதுதான் என்று தமிழகத்தில் இன்று கருத்து உருவாகி வருகின்றது. கச்சதீவை இந்திய மத்திய அரசு மீளப்பெறுமானால் அதை காரணமாக காட்டி 1987ல் செய்துகொள்ளப்பட்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்குள் திட்டம் தீட்டப்படுகின்றது. அதன்மூலம் 13ம் திருத்தத்துக்கு முழுமையாக முடிவு காணாலாம் என அரசுக்குள் உள்ள இனவாத பிரிவு நினைக்கின்றது.
ஆனால் இன்று பிரிபடாத நாட்டுக்குள் தமிழர்களுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும் என்பது ஐநா சபையின் பிரச்சினையாகி விட்டது என்பது இந்த இனவாதிகள் உணர வேண்டும். இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை கிழிப்பதன் மூலம் தமிழ் மக்களை தமது இனவாத கட்டுக்குள் தொடர்ந்து வைத்துகொள்ள முடியும் என்ற கனவை இலங்கை அரசு கைவிட வேண்டும்.
அதேபோல்இ இலங்கையில் மலையகத்திலும் வட-கிழக்கிலும் வாழும் தமிழர்களின் அபிலாஷைகளையும் தமிழக மக்களின் அபிலாஷைகளையும் கணக்கில் எடுக்காமல் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களை திருப்தி படுத்துவதற்காக தன்னிச்சையாக ஒப்பந்தங்களை செய்து வந்த தவறுகளை இந்திய மத்திய அரசு உணர வேண்டும்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் முதல் இன்று வரை இந்திய மத்திய அரசு இலங்கை அரசாங்கங்களை சந்தோசப்படுத்த எடுத்த எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இது இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசு மீண்டும் மீண்டும் கற்று கொடுத்து வரும் பாடம்.
வீரவன்சவுக்கு மாவை சேனாதிராசா மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம்
13ம் திருத்தத்தில் இருக்கின்ற அரைக்குறை அதிகாரங்களையும் வெட்டி குறைக்க விமல் வீரவன்ச போன்றோர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 13ம் திருத்தத்தில் அதிகாரங்களை அகற்றாவிட்டால் அரசில் இருந்து அகன்றுவிடுவேன் என தான் சொன்னது இன்று இந்த மனிதருக்கு மறந்து விட்டது.
இப்போது இவர் திடீர் என மாவை சேனாதிராசா மீது பாசம் கொண்டு கதை பேசுகின்றார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவையை ஒதுக்கிவிட்டு எங்கோ வழக்கு பேசிகொண்டிருந்த விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளாக நியமித்தது நியாயமா என இவர் இன்று ஊடகங்களுக்கு முன்னால் வந்து கண்ணீர் வடிக்கிறார். அண்ணன் மாவையை நினைத்து தம்பி வீரவன்ச அழுவதாக சொல்கிறார்.
தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் யார் முதல்வர் வேட்பாளர் யார் என்பவைகளை கூட்டமைப்புதான் முடிவு செய்ய முடியும். அத்துடன் மாவை சேனாதிராசா முன்வந்து விக்கினேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியும் விட்டார். ஆனால் வீரவன்சவின் முதலை கண்ணீர் நிற்கவில்லை.
இவர்தான் சில நாட்களுக்கு முன் மாவை சேனாதிராசாவை கடுமையாக தாக்கி பேசினார். பிரிவினைவாத பயங்கரவாத கட்சியான இலங்கை தமிழரசு கட்சியை தடை செய்ய வேண்டும் என சொன்னார். அந்த கட்சியின் பொது செயலாளர் மாவை சேனாதிராசாவை நாடு கடத்த வேண்டும் எனவும் சொன்னார்.
இந்த விமல் வீரவன்ச போன்றவர்கள் அரசியலில் சர்க்கஸ் கோமாளிகள். இத்தகைய கோமாளிகள் இன்று நிறைய இருக்கின்றார்கள். தாம் அன்று என்ன சொன்னோம் இன்று என்ன சொல்கிறோம் என்பது இவர்களுக்கு மறந்து போய் விடுகிறது. இந்த கோமாளிகளை பார்த்து என்றும் நேர்வழியில் பயணிக்கும் நாம் இன்று சிரித்து மகிழ்கின்றோம். நம்முடன் சேர்ந்து நாட்டு மக்களும் கைகொட்டி சிரித்து மகிழ்கிறார்கள்.
ஆஸ்திரேலிய படகு பயணம்
நம் நாட்டு மக்கள் நாட்டை விட்டு ஓடுவதும் ஓடி கடலில் மூழ்குவதும் இன்று இந்த நாட்டு அரசாங்கத்துக்கு பெரிய விடயமாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா செல்கிறோம் என சொல்லிக்கொண்டு கணிசமான இலங்கை குடிமக்கள் படகுகளில் செல்வதை நாம் கடுமையாக எதிர்த்து கண்டிக்கின்றோம்.
கிறிஸ்மஸ் தீவு பகுதியை சென்று அடைபவர்களைதான் நாம் கணக்கில் எடுக்கின்றோம். இன்னும் கணிசமானோர் போகும் வழியிலேயே கடலில் மூழ்கி விடுகின்றனர் என நான் சந்தேகிக்கின்றேன். இவர்கள் இந்த நாட்டு மக்கள். இவர்களை தடுத்து நிறுத்த இந்த நாட்டு கடற்படை முழு மனதுடன் செயற்படுகின்றதா என நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.
சிலரை போகவிட்டு சிலரை மட்டும் தடுத்து நிறுத்துகின்றீர்களா? என நான் கேட்க விரும்புகின்றேன். அல்லது போகின்றவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அப்படியாவது தமிழ் மக்களின் ஜனத்தொகை இந்த நாட்டில் குறைய வேண்டும் என அரசாங்கம் சும்மா இருக்கின்றதா?
படகில் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியா போவதை நிறுத்துங்கள் என இங்கிருந்து இன்று நாட்டை விட்டு ஓடுகின்றவர்களை நான் கேட்டு கொள்கின்றேன். இன்று நாட்டில் நிலைமை முற்றிலும் சீராகவில்லை. ஆனால் நாம் இங்கே இருந்து இன்று ஜனநாயகரீதியாக போராட வேண்டும். அதைவிடுத்து சட்டவிரோத படகு பயணம் வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக